எல்லாச் சினிமாக்களிலும் சாதி! – பா. இரஞ்சித் மகிழ்ச்சி!!

‘வர்ணாலயா சினி கிரியேசன்ஸ்’ சார்பாக ‘ராமச்சந்திரன்’, ‘பெவின்ஸ் பால்’ தயாரித்து இருக்கும் ‘பற’ படத்தை கீரா இயக்கியுள்ளார். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசப்பட்டவை… 

இயக்குநர் கீரா – “இந்தப் படத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் இசை அமைப்பாளர் மறைந்து விட்டார். அவ்வளவு குறைவாகத்தான் வாழ்நாள் இருக்கிறது. வாழும்போது துரோகமும் வன்மும் இல்லாமல் வாழ வேண்டும். இந்த ‘பற’ படத்தில் அண்ணன் சமுத்திரக்கனி ஏற்று நடித்திருக்கும் அம்பேத்கர் கேரக்டர் மூலமாக ஏற்றத்தாழ்வையும், சாதி ஒழிப்பையும், ஆணவக்கொலைக்கான தீர்வையும் சொல்லி இருக்கிறோம். இந்தப்படம் தரமான படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது..!”  

நடிகர் சமுத்திரக்கனி – “இந்தப்படத்தில் நான் நடிக்க வந்த காரணம் பா.ரஞ்சித்தான். அவர் தான் கீராவை அறிமுகப்படுத்தினார். கீரா காதலர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் கேரக்டர் உங்களுக்கு என்றார். நான் அதைத்தானே செய்து கொண்டிருக்கிறேன் என்றேன். இந்த இயக்குநர் கீராவிடம் நான் பா.ரஞ்சித்தைப் பார்க்கிறேன். எந்த உணர்ச்சியையும் அதிகமாக வெளிக்காட்டாத உண்மையாளர் ரஞ்சித். அதே கேரக்டர்தான் இயக்குநர் கீராவும். இந்தப்படத்தின் தயாரிப்பாளர் நல்ல நட்புள்ளம் கொண்டவர். இந்தப்படம் அற்புதமான படம். அருமையான பதிவு..!” 

பா.ரஞ்சித் – “இந்தக் கூட்டத்தைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. இயக்குநர் கீரா அண்ணனுக்கு இப்படியொரு வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கீரா அவரது கொள்கையை ஓங்கிப் பேசி வருகிறார். சாதிய ஒடுக்குமுறைகளைப் பற்றிய ஆழமான புரிதலை இந்தப்படம் பேசி இருக்கும் என்று நம்புகிறேன்.  புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை சமுத்திரக்கனி அண்ணனுக்கு வைத்திருக்கிறார்கள். இந்த மாதிரியான படங்கள் வெற்றி பெறவேண்டும். சமீபத்திய எல்லா கமர்சியல் சினிமாவிலும் சாதி பற்றிய டிஸ்கஷன் வைக்க வேண்டிய சூழல் உருவாகி இருப்பது மிகவும் வரவேற்கக் கூடியது. சினிமாவில் பாலியல் ரீதியாக பெண்கள் சுரண்டப்படுவது உண்மை தான். பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை வைப்பதால் அவர்களை குற்றம் சாட்டக்கூடாது..!”