‘நெஞ்சம் மறப்பதில்லை’ வெளியீட்டுக்காக காத்திருப்பதில் வெறுப்பா? ரெஜினா

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவா கியிருக்கும் படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை கவுதம் மேனன் தயாரித்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இப்படத்தை வெளியிடவுள்ளது. நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. தற்போது ரிலீஸூக்கு தயாராகி விட்ட இந்த படம் ஒரு இருண்ட படமாக இருக்கும் என்றும், அந்த வகையில் தமிழில் முதல் முயற்சியாக அது இருக்கும் என்றும் நடிகை ரெஜினா தெரிவித்துள்ளார்.

மேலும் படம் பற்றி அவர் கொஞ்சம் விவரித்த போது, ” ‘நெஞ்சம் மறப்பதில்லை’ வெளியீட்டுக்காக காத்திருப்பது வெறுப்பாக இல்லை. ஒவ்வொரு முறை வெளியீடு தேதி அறிவிக்கும்போதும், முதல் முறை அறிவிப்பின் போது இருந்தது போல எனக்குள் அதே ஆர்வம் இருக்கிறது. நான் ஆவலுடன் எதிர்நோக்கும் ஒரு படம் அது. பேய் படமோ, மர்மப் படம் என்றோ சொல்ல முடியாது. இருண்ட படம் என்று சொல்லலாம். அந்த வகையில் முதல் முயற்சியும் கூட.

செல்வராகவன் கண்டிப்பான இயக்குநர் கிடையாது. ஆனால் நேர்த்தியை விரும்புவர். தனக்கு என்ன வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அவருடன் பணியாற்றுவது கடினமாக இருக்கும் என பலர் என்னிடம் கூறினர். அதை நான் மனதில் வைத்துக்கொள்ளவில்லை. நல்லவேளை வைத்துக்கொள்ள வில்லை. கதாபாத்திரத்துக்கும், கதைக்கும் முக்கியத்துவம் தருவதால் தான் மிகச் சில படங்களில் நடிக்கிறேன். தமிழில் வந்த கமர்ஷியல் பட வாய்ப்புகளில் ஒரு சிலவற்றை தேர்ந்தெடுத்து, என்ன நடக்கிறது என காத்திருந்து பார்த்தேன். நடிப்பில் வளர்ச்சியிருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக கற்று, முன்னேற்றி வருகிறேன்” என்று கூறியுள்ளார்.

ரெஜினா தற்போது ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘பார்ட்டி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.