உமன் போலீசின் பிரச்னையைச் சொல்லும் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்..!

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள 3-வது படம் ‘மிக மிக அவசரம்’. மேலும்  இந்த படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குநராகி இருக்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. படத்தின் கதை நாயகியாக ஸ்ரீப்ரியங்கா நடித்துள்ளார். அரீஷ்குமார் நாயகனாகவும், இயக்குநர் சீமான் காவல்துறை உயரதிகாரி யாகவும் நடித்துள்ளனர்.

மேலும் முத்துராமன், இயக்குநர் ஈ.ராமதாஸ், அரவிந்த், லிங்கா, சாரதி, இயக்குநர் சரவணசக்தி, வெற்றிக்குமரன், வி.கே.சுந்தர், குணசீலன், மாஸ்டர் சாமுண்டி உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இன்று சமூகத்தில் பெரும்பாலும் பெண்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர்.  இப்படி சூழல் மாறினாலும், வேலைக்கு செல்லும் பெண்களின் அவல நிலை மட்டும் மாறவே இல்லை. ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு விதமான பிரச்னைகளை அவர்கள் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.  அந்த வகையில் இந்த ‘மிக மிக அவசரம்’ படத்தில் காவல் துறையில் சாதாரண பொறுப்பில் பணியாற்றும் ஒரு இளம் பெண் போலீஸ், அந்த துறையில் சந்திக்கும் மிக நுட்பமான பிரச்சனைகளை விரிவாகவும், பட்டவர்த்தனமாகவும் அலசியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் காமாட்சி.

இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று சென்சார் அதிகாரிகளுக்கு இந்தப் படம் திரையிடப்பட்டது.

படத்தை பார்த்த அதிகாரிகள் படத்தில் எந்தவித திருத்தங்களும் சொல்லாமல் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் விதமாக ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ஸ்ரீபிரியங்காவின் அற்புதமான நடிப்பிற்கு தங்களது தனிப்பட்ட பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

படம் விரைவில் வெளியாகவுள்ளது.