சூர்யா-வை மூன்றாவது முறை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்!

செல்வராகவன் இயக்கத்தில் ‘NGK’ என்ற படத்தில் நடித்து வரும் சூர்யா, இந்த படம் முடிந்ததும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் ஏற்கெனவே வெளியாகியிருந்தது. ஆனால் இது குறித்த எந்த அதிகார பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகாத நிலையில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இப்போது இயக்குனர் கே.வி.ஆனந்த் வெளியிட்டுள்ளார்.

கே.வி.ஆனந்த் இது குறித்து, ‘தனது அடுத்த படம் சூர்யாவுடன் என்றும், இந்த படத்தை ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்றும அறிவித்துள்ளதோடு இந்த படத்தில் எழுத்தாளர் பட்டுகோட்டை பிரபாகர், இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், கலை இயக்குனர் கிரண் ஆகியோருடன் தான் பணியாற்றவிருப்பதையும் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்திற்கு Gavmic Ary ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

காத்திக் சுப்புராஜ இயக்கிய ‘ஜிகர்தண்டா’ மற்றும் அமலா பால் நடித்த ‘அம்மா கணக்கு’ ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர் Gavmic Ary. இவர் இந்த படங்கள் தவிர சில ஹிந்தி படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘அயன்’ ‘மாற்றான்’ ஆகிய படங்களை தொடர்ந்து கே.வி.ஆனந்த், சூர்யா, ஹாரிஸ் ஜெயராஜ் மூன்றாவது முறையாக இணையும் இந்த படம் குறித்த மேலும் புதிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.