ஷங்கர் + ரஜினி உருவாகி வரும் 2 பாயிண்ட் 0 ஷூட்டிங் ஓவர்!

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. இறுதிகட்டப் பணிகளில் முழுக்கவனத்தையும் செலுத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.சில காட்சிகள் மற்றும் ஒரு பாடல் படப்பிடிப்பு மட்டுமே ‘2.0’ படத்தில் மிச்சமிருந்தது. அதனை படமாக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. அப்பணிகள் யாவும் இன்றுடன் முடிக்கப்பட்டது. இதனை நாயகி ஏமிஜாக்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘2.0’ உருவான விதம் மற்றும் 3டி பணிகளுக்கான வீடியோ பதிவுகள் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. மேலும், அக்டோபர் 27-ம் தேதி இசை வெளியீட்டை துபாயில் பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்திருக்கிறது லைகா நிறுவனம். இதற்காக ஒட்டுமொத்த படக்குழுவினரும் துபாயிக்கு பயணிக்கவுள்ளார்கள்.

3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் படமென்பதால், கிராபிக்ஸ் பணிகள் அதிகமாக இருப்பதால் அதில் முழுமையாக கவனம் செலுத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘2.0’. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சுமார் ரூ.400 கோடி பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தியா மட்டுமன்றி உலகளவில் தமிழ்ப் படங்களே வெளியாகாத நாடுகளிலும் இப்படத்தை 2018-ம் ஆண்டு ஜனவரியில் வெளியிட லைக்கா நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.