யோவ். டி..ஆரூ? நீ யாருய்யா அந்த பொண்ணை அவமரியாதை செய்ய? விஷால் கோபம்!

நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “ஒரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தன் பெயரை சொல்லவில்லை என்பதற்காக இயக்குநர் டி.ராஜேந்தர் நடிகை தன்ஷிகாவை வன்மையாக கண்டித்ததும் தன்ஷிகா மன்றாடி மன்னிப்பு கேட்டும் கூட டிஆர் அவரை மன்னிக்காமல் தொடர்ந்து காயப்படுத்தியதையும் அறிந்தேன்.

டி.ராஜேந்தர் அவர்கள் ஒரு மூத்த கலைஞர். பன்முக வித்தகர். மேடையில் ஒரு நடிகை பேசும்போது ஒருவரது பெயரை மறப்பது என்பது இயல்பானதே… நானே சில மேடைகளில் அருகில் அமர்ந்திருந்தவர் பெயரை மறந்திருக்கிறேன். டிஆர் அவர்கள் சுட்டிக் காட்டிய பின்னர் சாய்தன்ஷிகா அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். அப்படி மன்னிப்பு கேட்கும் தன் மகள் வயதையொத்த சாய்தன்ஷிகாவை பெருந்தன்மையாக மன்னித்திருக்கலாம். ஆனால் மென்மேலும் அவரைக் காயப்படுத்திய செயலை டிஆர் போன்ற ஒரு படைப்பாளியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.

திரையுலகில் ஒரு பெண் நடிகையாவது எத்தனை சிரமம் என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு சாய்தன்ஷிகாவை நன்றாக தெரியும். அவரை அறிந்தவர்கள் அவர் அப்படி வேண்டுமென்றே அவமரியாதை செய்யும் குணம் கொண்டவர் அல்ல என்பதையும் அறிவர். அவர் மன்னிப்பு கேட்டும்கூட தொடர்ந்து காயப்படுத்தும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்திய டிஆர் அவர்களுக்கு நான் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். இது நடிகர்கள் விதார்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோருக்கு… சக நடிகை மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தப்பட்டபோது எதிர்ப்பு தெரிவிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. நாகரீகம் கருதி அதனை கைதட்டி ரசிக்காமலாவது இருந்திருக்கலாம்.
“ என்று விஷால் பெயரில் வந்திருந்தது கோலிவுட்டில் ஹாட் டாபிக்காகி விட்டது .

முன்னதாக மீரா கதிரவன் இயக்கத்தில் வெங்கட்பிரபு, விதார்த், கிருஷ்ணா, தன்ஷிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘விழித்திரு’. இதில் டி.ராஜேந்தர் ஒரு பாடல் பாடி, அதற்கு நடனமும் ஆடியுள்ளார். அக்டோபர் 6-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.


இதில் தன்ஷிகா பேசும்போது, மேடையிலிருந்த அனைவரையும் பற்றி பேசிவிட்டு டி.ராஜேந்தரை பற்றி குறிப்பிட மறந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து பேசவந்த டி.ராஜேந்தர் “‘கபாலி’ படத்தில் ரஜினியோடு நடித்தவுடன் தன்ஷிகா, டி.ராஜேந்தரை மறந்துவிட்டார். அவருடைய பேச்சில் என்னைப் பற்றிக் குறிப்பிட மறந்துவிட்டார்” என்று கூறினார்.

தொடர்ச்சியாக தன்ஷிகாவை கடுமையாக சாடவே, தன்ஷிகா “மன்னிக்க வேண்டும். வேண்டுமென்றே குறிப்பிடாமல் இல்லை. மறந்துவிட்டேன். உங்கள் மீது எனக்கு மிகப்பெரிய மதிப்புள்ளது. ” என்று கூறினார்.

ஆனாலும் டி.ராஜேந்தர் “மேடை நாகரிகம் என்று ஒன்றுள்ளது. உன்னுடைய மதிப்பை எடுத்துக் கொண்டுப் போய் எந்த மார்க்கெட்டில் விற்பது. மேடை நாகரிகம் என்று ஒன்றுள்ளது. நான் ஹன்சிகாவையே பார்த்தவன்” எனத் தொடர்ச்சியாக அவரை கடிந்துக் கொண்டார். இதனால் தன்ஷிகா அழத் தொடங்கினார் என்பது பிளாஷ் பேக் ரிப்போர்ட்.