அரியலூர் அனிதா மறைவுக்கு திரையுலகத்தினரின் இரங்கல் செய்தி..!

நீட் தேர்வை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த மாணவி அனிதா (17) இன்று தன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 12ம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும், நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் அவருக்கு மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்கவில்லை. இந்த வருத்தத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் மாணவி அனிதா மறைவுக்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். . ரஜினிகாந்த் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘ அனிதாவிற்கு நிகழ்ந்தது மிகவும் துரதிருஷ்டவசமானது. என் மனம் மிகுந்த வேதனை அடைந்துள்ளது. இப்படி ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு அனிதா பட்ட வலியையும், வேதனையும் என்னால் உணர முடிகிறது. அவருடைய குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல்” என்று கூறியுள்ளார். கமல்ஹாசன் , “மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக வாதாட வேண்டியவர்கள் எல்லாம், பேரம் பேசி கொண்டிருக்கிறார்கள். மாணவி அனிதாவின் தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும். சாதி, கட்சி பாகுபாடின்றி நியாயத்திற்காக அனைவரும் போராட வேண்டும். நீட் விவகாரத்தில் இன்று வருகிறது நல்ல செய்தி என கூறியவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டார்கள். கனவுடன் வாழ்ந்த பெண்ணை, மண்ணோடு மண்ணாக்கி விட்டோம். அனிதா எனக்கும் மகள் தான். ஒரு நல்ல டாக்டரை இழந்து விட்டோம்” என தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால் , “அரியலூர் அனிதா தற்கொலை செய்துகொண்டது குறித்து நடிகர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தங்கை அனிதா தற்கொலை செய்து கொண்டதை அறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன். அனிதா, தான் பாதிக்கப்பட்டது போல் மற்ற மாணவ மாணவிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக நீதிமன்றப் படிகளில் ஏறிப் போராடியவர். 196.5 கட்-ஆஃப் பெற்றும் கூட அனிதா மருத்துவக் கல்விக்கு தகுதி பெறவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. பதிலாக நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்தவர்கள் நம்மை ஆள்வதற்கு தகுதியற்றவர்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும், “மக்கள் எல்லாவற்றையும் சகித்துக் கொள்வார்கள் அல்லது மறந்துவிடுவார்கள் என்ற அலட்சியத்தில் இருக்கிற ஆட்சியாளர்கள் திருந்த வேண்டும். இனி தமிழ்நாட்டு மாணவர்கள் பாதிக்காத வகையில் ஆட்சியாளர்கள் சட்டம் இயற்ற வேண்டும். இப்படி நீட் தேர்வு குழறுபடிகளால் பாதிக்கப்பட்ட தம்பி தங்கைகளுக்கு நான் வைக்கிற கோரிக்கை, இதுபோன்ற தவறான முடிவு எடுக்காதீர்கள். ஒரு சகோதரனாக உங்களுடைய கல்வி உதவத் தயாரக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ஜி.வி. பிரகாஷ்குமார் “ கழிப்பறை கூட இல்லாத வீட்டில் மருத்துவ கனவோடு பிறந்த அனிதா – இன்று இல்லை..நீட் தேர்வால் உயிரிழந்த அனிதான் மரணம், அதிகாரமும், சட்டமும் சேர்ந்து செய்த படுகொலை.” என கூறியுள்ளார். ராகவா லாரன்ஸ் “அனிதாவின் மரணச் செய்தி மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி ஒரு துயரமான முடிவை அவர் எடுக்க அவருக்கு ஏற்பட்ட சூழ்நிலையைப் பற்றி யோசிக்கவே வலிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன், “இந்த தேசம் ‘தகுதி’யுள்ள ஒரு நல்ல மருத்துவரை இழந்து விட்டது…என் தங்கைக்கு கண்ணீர் அஞ்சலி.” என்று சொல்லி உள்ளார். விவேக், “உன் குடும்பத்தை தேற்ற எனக்கு வழி தெரியவில்லை சகோதரி. ஆயினும் உன் வலி புரிகிறது. எனினும் தற்கொலை எப்படியம்மா தீர்வாகும்?. இதற்கு மேல் என்ன படிக்க ? ஒரு அருமை மாணவியை, அன்பு மகளை, எதிர்கால மருத்துவரை தமிழகம் இழந்து விட்டது” என்று  தெரிவித்துள்ளார்.

ஆர்ஜே. பாலாஜி ”வெட்கமற்ற, தகுதியற்ற, ஊழல் தலைவர்களின் பொறுப்பற்ற செயல்களால் ஏழை மாணவர்கள் அவர்கள் கனவுகளைத் தியாகம் செய்வது மட்டுமல்லாமல் இப்போது வாழ்க்கையயைம் தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது.” என சொல்லி உள்ளார். சூரி “படிப்பை இழந்தது நீயல்ல… இந்த தேசம் தான் ஒரு நல்ல மருத்துவரை இழந்து விட்டது. கண்ணீர் அஞ்சலி தங்கையே.” என குறிப்பிட்டுள்ளார்..

இயக்குனர் சேரன், “ஏழைகளின் சார்பில் கண்ணுக்குள் ஒளித்து வைத்திருந்த ஆயிரமாயிரம் கனவுகளை அரை நொடியில் அழித்தாயோ அனிதா…செங்கொடி வழி நீயோ.” என வருந்தி உள்ளார்.  இயக்குனர் தங்கர்பச்சான் “அனிதா கேட்கிறார்! மாணவர்களின் குற்றமா ? ஆட்சியாளர்களின் குற்றமா ? தண்டிக்க வேண்டியது ஆட்சியாளர்களையா ? மாணவர்களையா ? நீதியைத் தரப் போவது யார்?” என வருந்தி உள்ளார். இயக்குனர் சீனு ராமசாமி “டாக்டர் அனிதா தங்கையே உங்கள் தற்கொலை ஏற்புடையதல்ல. நேர்மையற்றவர்கள் பிழைக்கும் நாட்டில் நீங்கள் வாழ்ந்திருக்க வேண்டும். இதய அஞ்சலி.” என சொல்லி உள்ளார். இயக்குனர் பாண்டிராஜ்”Rip போடுற வயசா இது ? வேதனைப்பட வேண்டிய விசயம் இல்லை. வெக்கப்பட வேண்டிய விசயம். எப்போ கல்வி வியாபாரம் ஆச்சோ அப்பவே அரசும் செத்து போச்சு” என சொல்லி உள்ளார். .

இயக்குனர் பா. ரஞ்சித் “ஒரு தலைமுறையின் பெருங்கனவை சிதைத்த சமுக நீதியற்ற இந்த தேசத்தில் உன் கடைசி நிமிட வலி பரவட்டும் நாடெங்கும்.” என்றும் இயக்குனர் ராம், “நீட் ஒரு அரசபயங்கரவாதம். 12 வருட உழைப்பை, கனவை, அனிதாவை படுகொலை செய்த  பயங்கரவாதம்” என கூறி உள்ளார்கள். .

பாடலாசிரியை தாமரை “பல உயிர்களை காப்பாற்றியிருக்க வேண்டிய சகோதரி, இன்று தன் உயிரை மாய்த்துக்கொண்டார். எவ்வளவு கனவுகள் நசுக்கப்பட்டிருக்கும்” என்றும் பாடலாசிரியர் விவேக் “மூட்ட தூக்கி படிக்க வச்ச அப்பா. ஒரு தலைமுறைக்கான கனவுடா அது. 1176 ம் தன் ரத்தமும் கொடுத்தாச்சு. இன்னும் பசிக்குதா உங்களுக்கு?” என்றும் தெரிவித்துள்ளனர்.

வைரமுத்து அவரது இரங்கல் செய்தியில், ‘அடி பாவி மகளே’ என்று நெஞ்சு பதறுகிறது. அனிதாவின் தற்கொலையும் சமூக நீதியின் கொலையும் ஒரே தருணத்தில் நிகழ்ந்திருக்கின்றன.

ஒட்டுமொத்த நிகழ்காலமும் இந்தத் தற்கொலைக்குப் பொறுப்பேற்க வேண்டும்.

மொத்தம் மரணம் மூன்று வகை.

இயல்பான மரணம் – அது மனிதன் மீது இயற்கை காட்டும் எதிர்ப்பு,
இன்னொன்று கொலை – அது மனிதன் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு,
மூன்றாவது தற்கொலை – அது சமூகத்தின் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு.

அநீதிக்கு எதிரான போர்க்களத்தில் இப்போது ஒரு போராளியை இழந்து நிற்கிறோம். ஆழ்ந்த அனுதாபங்களை யாருக்குச் சொல்வது?

தமிழ்ச் சமூகத்துத் தங்கங்களே தற்கொலைக்குக் காட்டும் தைரியத்தை, வாழ்வதற்கு ஏன் காட்டக்கூடாது?

தற்கொலை தீர்வல்ல, வாழ்வுதான் தீர்வு.” என்று வருந்தி உள்ளார்