7 வருடம் பின்னோக்கி இருந்த தமிழ் திரையுலகை காப்பாற்ற வேண்டும்! விஷால் ஆசை!

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், அனு இம்மானுவேல், பிரசன்னா, வினய், இயக்குநர் பாக்யராஜ், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துப்பறிவாளன்’. அரோல் குரலி இசையமைத்து வரும் இப்படத்தை விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்று, செப்டம்பர் 14-ம் தேதி வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இதற்காக இறுதிகட்ட பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் “நடிகர் சங்கம் – தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட பணிகளால் சரியாக படப்பிடிப்புக்குச் செல்ல முடியவில்லை. ஜனவரியில் ஒரு படம், ஏப்ரலில் ஒரு படம் என்று திட்டமிட்டு இருந்தீர்கள். அதுவும் முடியாமல் போய்விட்டது. இதனால் நீங்கள் வாங்கி கடனுக்கு வட்டி அதிகமாக கட்ட வேண்டியதிருக்குமே. இதனால் உங்களுக்கு பெரிய இழப்பு தானே” என்ற கேள்வியை விஷாலிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:

இந்த இழப்பை எல்லாம் ‘சண்டக்கோழி 2’ படத்தின் மூலம் மொத்தமாக கூட சரி செய்து கொள்ளலாம். தனிப்பட்ட முறையில் எனக்கு மிகப்பெரிய இழப்பு தான். ஆனால் இங்கே ஒன்றை இழந்தால் தான் மற்றொன்று கிடைக்கும். கோடிகளை எப்போது வேண்டுமானாலும் சம்பாத்தித்து கொள்ளலாம். 7 வருடம் பின்னோக்கி இருந்த தமிழ் திரையுலகை காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே எப்போதும் சிந்தனையில் இருந்து வருகிறது. தற்போதைக்கு உண்ண உணவு , உடுத்த உடை எல்லாம் வாங்குமளவுக்கு பணம் உள்ளது. அது போதும்”இவ்வாறு விஷால் கூறினார்.

‘துப்பறிவாளன்’ மற்றும் ‘இரும்புத்திரை’ ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவுற்றதால், ஆகஸ்ட் மாதம் இறுதியிலிருந்து ‘சண்டக்கோழி 2’ படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் விஷால். இதற்காக சென்னையில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.