வேலைக்காரன் மவுசு ஜாஸ்தி!

சிவகார்த்திகேயன் நடித்துவரும் ‘வேலைக்காரன்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் சிவகார்த்திகேயனின் படங்கள் ரிலீஸ் ஆகும் போதெல்லாம் வசூல் வேட்டை செய்ய தவறுவதில்லை. இதனால் விநிநோகிஸ்தர்கள் மத்தியில் சிவகார்த்திகேயன் படங்களுக்கு உள்ள வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் ரெமோவின் மாபெரும் வெற்றியால் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் சிவகார்த்திகேயன் படங்களுக்கான மார்க்கெட் பெரிதாக உயர்ந்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயனின் படங்களை வாங்க பெரிய நிறுவனங்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது.

முன்னதாக வேலைகாரன் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியது என்று தயாரிப்பு நிறுவனமான ‘24ஏஎம் ஸ்டூடியோஸ்’ நேற்று அறிவித்திருந்த நிலையில் தற்போது படத்தின் யூரோப் மற்றும் யூகே வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஐயங்கரன் இண்டர்நேஷனல் கைப்பற்றியுள்ளது. இந்த செய்தியை ‘24ஏஎம் ஸ்டூடியோஸ்’ நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதேபோல் நியுசிலாந்த், ஆஸ்திரேலிய வெளியீட்டு உரிமையை சதர்ன் ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வேலைக்காரன் படத்தின் வெளிநாடு வெளியீட்டு உரிமைகளின் விற்பனை மகிழ்ச்சியளிப்பதாக ‘24ஏஎம் ஸ்டூடியோஸ்’ தெரிவித்துள்ளது.

இதனிடையே இப்படத்தின் பிரதான படப்பிடிப்பை முடித்துவிட்டு, பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் சிவகார்த்திகேயன். சமந்தா, சூரி, சிம்ரன், லால் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படத்தை தயாரித்து வருகிறது 24 ஏ.எம் நிறுவனம். பொன்ராம் படத்தின் 25% காட்சிகள் முடிந்துவிட்டது. தற்போது ‘வேலைக்காரன்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை சென்னையில் துவங்கியுள்ளது படக்குழு. இதில் சிவகார்த்திகேயன், ஆர்.ஜே.பாலாஜி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். 10 நாட்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடையும் என படக்குழுவினர் தெரிவித்தார்கள்.

சிவகார்த்திகேயனோடு நயன்தாரா, பஹத் பாசில், ஆர்.ஜே.பாலாஜி, பிரகாஷ்ராஜ், சினேகா, ரோகிணி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். ஆகஸ்ட் மாதம் இசை வெளியீடும், செப்டம்பர் 29-ம் தேதி ‘வேலைக்காரன்’ படமும் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.