லைகா புரொடக்‌ஷனின் ‘ கோ கோ’ என்ற படத்தில் நயன்தாரா!

கத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமா தயாரிப்பில் இறங்கிய லைகா நிறுவனம், தற்போது ஷங்கர் – ரஜினி கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘2.0’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் பிஸியாக இருக்கிறது. அத்துடன், ‘இப்படை வெல்லும்’, ‘கரு’, ‘சபாஷ் நாயுடு’ ஆகிய படங்களையும் தயாரித்து வருகிறது. அதே  சமயம் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின்போது மத்திய – மாநில அரசுகளின் இரட்டை வரிவிதிப்பை எதிர்த்து தியேட்டர்களை மூடி போராட்டம் நடத்தினார்கள், திரைப்பட வர்த்தக சபையினர். இந்த திடீர் முடிவினால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவதையும் கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டதால், இனி சில காலங்களுக்குப் படங்களை கமிட் செய்ய மாட்டோம் என அறிவித்திருந்தது லைகா நிறுவனம். ஆனால், இப்போது அந்த முடிவிலிருந்து வெளியே வந்து நயன்தாராவுடன் ஒரு படத்தை ஓகே செய்திருக்கிறார்கள்.

‘கோ கோ’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தில் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங்கை விரைவில் தொடங்க முடிவெடுத்திருப்பதாக லைகா கிரியேட்டிவ் ஹெட் ராஜு மகாலிங்கம் தெரிவித்தி ருக்கிறார். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தில் யோகி பாபு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்தப் படத்தின் கதையைக் கேட்டதுமே தயாரிப்பாளருக்குப் பிடித்து விட்டதால், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் ஷூட்டிங் தயாராகி வருவதாகவும் இந்தப் படம், மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகிறது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

அண்மையில் சிவகார்த்திகேயனோடு நடித்துக்கொண்டிருக்கும் ‘வேலைக்காரன்’ திரைப்படத்தின் ஸ்டில்கள் வெளியானதையடுத்து நயன்தாராவின் அடுத்தப்படம் குறித்தும் வந்த தகவலால் நயன் ரசிகர்கள் ஹேப்பி!