கேன்ஸ் திரைப்பட விழாவில் உரையாற்றிய மத்திய அமைச்சர்

கேன்ஸ் திரைப்பட விழாவின் இந்திய அமைப்பில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் உரையாற்றினார்.

6000 ஆண்டு பழமை வாய்ந்த கலாச்சாரம் மற்றும் 130 கோடி மக்களின் பிரதிநிதியாக கலந்து கொண்டுள்ள அமைச்சர், இந்திய மற்றும் வெளிநாட்டு திரைப்படத்துறையினர், பத்திரிகையாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் இடையே சிறப்புரை ஆற்றினார்.

திருமிகு வாணி திரிபாதி அமர்வை நெறியாள்கை செய்தார். அந்த அரங்கில் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சக செயலர் திரு அபூர்வ சந்திரா, எழுத்தாளரும், கவிஞரும், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் தலைவருமான திரு பிரசூன் ஜோஷி, திரைப்பட நடிகர், கதாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் திரு மாதவன், திரைப்பட நடிகர், மற்றும் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவன தலைவர் திரு சேகர் கபூர், திரைப்பட தொகுப்பாளர், ஹாலிவுட் நிருபர் திரு ஸ்காட் ராக்ஸ்பரோ, தயாரிப்பாளர் திரு பிலிப் அவ்ரில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கேன்ஸ் படவிழாவின் முக்கியத்துவம் குறித்து குறிப்பிட்ட அமைச்சர், இந்திய – பிரான்ஸ் உறவுகளை வலுப்படுத்துவதில் இதில் முக்கிய பங்காற்றுவதாக தெரிவித்தார். இந்திய சினிமாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சம் பற்றி குறிப்பிட்ட அமைச்சர், இந்திய திரைப்படங்களின் கதை, இசை, ஒளிப்பதிவு உள்ளிட்ட உள்ளடக்கம் உலக ரசிகர்களின் இதயத்தையும், மனதையும் ஆட்சி புரிவதாக தெரிவித்தார். இதற்கான அடிக்கல்லை இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சேத்தன் ஆனந்த் தனது நீச்சா நகர் திரைப்படத்தின் மூலம் 1946-ல் நாட்டினார். 10 ஆண்டுகளுக்கு பின்னர் 1956-ல் சத்யஜித் ரேயின் பதர் பாஞ்சாலி, பால்மே டிவோர் விருதை வென்றது. இன்று இந்திய சினிமா பலமடங்கு உயர்ந்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.

இந்தியாவின் திரைப்பட திறமை, தொழில்நுட்ப வலிமை, செழுமையான கலாச்சாரம், கதை சொல்வதில் வண்ணமிகு பாரம்பரியம் ஆகிய கலவையான திரைப்படத்தை உலக ரசிகர்களுக்கு வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். பல்வேறு மொழிகள், பிராந்தியங்களைச் சேர்ந்த நடிகர்கள் மற்றும் திரைப்பட இயக்குனர்களின் திறமை, இளைஞர்களையும், முதியோர்களையும் பரவசப்படுத்துவதாக அமைந்துள்ளன என்று அவர் கூறினார்.