தங்கள் அபிமான நடிகர் சூர்யாவைப் போலவே அவரது ரசிகர்களும் சமூகச் செயல்பாடுகளில் கவனம் செலுத்துபவர்கள். இந்த கொரோனா முடக்க காலத்திலும் சூர்யாவின் ரசிகர்கள் சலசலப்பு இன்றி விளம்பர ஆரவாரமின்றி காரியங்களை நிறைவேற்றி வருகிறார்கள்.
தொடர்ந்து கொண்டிருக்கிற கொரோனாவின் அசாதாரண பொது முடக்கக் காலம் இன்றைய தினமான ஜூலை 23-ம் தேதியோடு 115-வது நாளாகிறது. இத்தனை நாட்களிலும் சூர்யா ரசிகர் மன்றத்தின் ரசிகர்கள் தமிழ்நாடு முழுக்கவும் அனாதைகளுக்கும், ஆதரவற்றோருக்கும் உணவு அளித்து வருகிறார்கள். அதுவும் ஓசைப்படாமல்.
தங்கள் நட்சத்திர நடிகர் சூர்யாவின் 45-வது பிறந்த நாள் இன்று ஜூலை 23-ல் வந்ததையொட்டி தங்களது தொண்டின் மூலமும், சேவை மூலமும் இந்தப் பிறந்த நாளை அசத்த வேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டிருந்தனர். அதன்படி இன்று சென்னையில் உள்ள 45 ஆதரவற்றோர் இல்லங்களுக்கு இலவசமாக உணவு வழங்கினார்கள்.
சேவை மூலம் இப்படி மன திருப்தி அடையும் ரசிகர்கள் சூர்யா நடித்திருக்கும் ‘சூரரைப் போற்று’ படம் எப்போது வரும் என்று ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள். விரைவில் வர இருக்கும் அந்த படத்தின் டீஸரும் பாடல்களும் வெளியாகி மில்லியன் கணக்கில் பார்வைகளை அள்ளியிருக்கின்றன.
‘வெய்யோன் சில்லி…’ பாடலும், ‘மண்ணுருண்டை…’ பாடலும் பெரிய வெற்றி பெற்றுவிட்டன. ‘சிஎன் சிறுக்கிகிட்ட சீவனத் தொலைச்சிட்டேன்’ வரிகளும் ‘பருந்தாகுது ஊர்க்குருவி; வணங்காதது என் பிறவி’ வரிகளும் ரசிகர்களின் அன்றாட முணுமுணுப்புகள் ஆகிவிட்டன. படத்தின் டீஸரும் வெளியாகி அதிரிபுதிரி மில்லியன்கள் வெற்றியில் எகிறிக் கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தின் மூன்றாவது பாடலான ‘காட்டுப் பயலே…’ பாடலின் முன்னோட்டமாக, ஒரு நிமிட ஸ்பெஷல் வீடியோ சூரியாவின் பிறந்த நாளையொட்டி இன்று காலை 10 மணிக்கு உலகம் முழுவதும் இருக்கும் சூரியாவின் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக வெளியிடப்பட்டது.
2-D எண்ட்டெர்டெயின்மெண்ட், சிக்யா எண்ட்டெர்டெயின்மெண்ட் உடன் இணைந்த தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் உருவாகியுள்ள இந்த சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.அந்தப் பாடலின் டீஸர் இதோ :