ஆசீர்வதிக்கப்பட்ட நடிகர் ஜெயம் ரவி – அடங்க மறு நாயகி சர்டிபிகேட்!

பேரழகு என்று சொல்வதோ அல்லது  ஃபேன்ஸி நாயகி என்று சொல்வதிலோ ராஷி கண்ணாவுக்கு விருப்பமில்லை. வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் ஒவ்வொரு படத்திலும் தனது எல்லையை விரிவுபடுத்திக் கொண்டே போகிறார். இமைக்கா நொடிகள் படத்தில் ஒரு அழகான கதாபாத்திரத்தைத் தொடர்ந்து, தனது இரண்டாவது படமான ஜெயம் ரவியின் ‘அடங்க மறு’ ரிலீஸுக்கு தயாராகி வருகிறார் ராஷி கண்ணா. தனது ஹீரோ ஜெயம் ரவி மற்றும் இயக்குனர் கார்த்திக் தங்கவேல்  ஆகியோரை பற்றி பேசுகிறார் நாயகி ராஷி கண்ணா.
“நான் ஒரு நடிகையாக விரும்பிய முதல் மற்றும் முன்னணி விஷயம் ‘பார்பி கேர்ள்’ என்ற இமேஜை உடைத்து, ஒரு நல்ல அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது தான். அது இந்த படத்தில் நடந்திருக்கிறது.  உண்மையில், அடங்க மறுவில் என் கதாபாத்திரம் வெறுமனே வந்து செல்வது போல இல்லாமல், படம் முழுக்க பயணிக்கும் ஒரு முழுமையான, வலுவான கதாபாத்திரம். என்னுடைய முழு திறமைகளை வெளிப்படுத்த உதவிய இந்த படம் எனக்கு மிகவும் திருப்திகரமான அனுபவம்.
நாயகம் ஜெயம் ரவி பற்றி பேசும்போது, “மிகவும் எளிமையான, அர்ப்பணிப்பு உள்ள மனிதர், கேமரா முன்பாக அவர் அளிக்கும் உருமாற்றம் வியக்கத்தக்கது. இயக்குனர் சொல்லும் விஷயங்களை உள்வாங்கிக் கொண்டு, தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தும் அவர்,  உண்மையில் ஒரு திறமையான, ஆசீர்வதிக்கப்பட்ட நடிகர்” என்றார்.
இயக்குனர் கார்த்திக் தங்கவேலு பற்றி கூறும்போது, “வழக்கமாக ஆக்‌ஷன் திரில்லர் படங்களில் நாயகன் கதாபாத்திரத்தின் மீது மிகுந்த  அழுத்தத்தை கொண்டிருக்கும். ஆனால் பெண்களுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரத்தை வழங்குவது தனித்துவமானது. அடங்க மறுவில் என் கதாபாத்திரத்தை மிக அழகாக செய்திருக்கிறார் இயக்குனர் தங்கவேலு” என்றார்.
திருமதி சுஜாதா விஜயகுமாரின் ஹோம் மூவி மேக்கர்ஸ் இந்த அடங்க மறு படத்தை தயாரித்திருக்கிறது. ஆக்‌ஷன்  த்ரில்லர் படமான இந்த அடங்க மறு, டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. சாம் சிஎஸ் இசையமைக்க, சத்யன் சூரியன் கேமராவை கையாண்டிருக்கிறார். ரூபன் எடிட்டிங் செய்திருக்கிறார்.