‘ஜருகண்டி’யும் “வெற்றிப் படங்களின் வரிசையில் இணையும் – நிதின் சத்யா நம்பிக்கை!

“சமீபத்தில் மிகப் பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படங்கள் போலவே அக்டோபர் 25-ம் தேதி வெளியாகும் தனது ‘ஜருகண்டி’ படமும் பெரும் வரவேற்பை பெறும்…” என்று நம்புகிறார் தயாரிப்பாளரும், நடிகருமான நிதின் சத்யா.  தயாரிப்பாளர் பத்ரி கஸ்தூரி உடன் இணைந்து, தனது சொந்த நிறுவனமான ஸ்வேத் குரூப் சார்பில் இந்த ‘ஜருகண்டி’ படத்தை தயாரித்து உள்ளார் நடிகர் நிதின் சத்யா. இத்திரைப்படத்தில் நிதின் சத்யாவின் மிக நெருங்கிய நண்பரான ஜெய் ஹீரோவாக நடித்திருக்கிறார். ‘ஜெகோபிண்டே சொர்க்க ராஜ்ஜியம்’ என்கிற மலையாளத் திரைப்படத்தில் நாயகியாக நடித்த ரெபா மோனிகா ஜான், இந்தப் படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் மூலம் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் இணை இயக்குநரான பணியாற்றிய பிச்சுமணி இயக்குநராக தமிழ்ச் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகிறார்.

‘ஜருகண்டி’ திரைப்படம் வரும் அக்டோபர் 25-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதையொட்டி தயாரிப்பாளர் நிதின் சத்யா படம் பற்றிப் பேசினார்.

நிதின் சத்யா பேசும்போது, “இது ஒரு தயாரிப்பாளரின் தன்னம்பிக்கை சார்ந்த விஷயம் என்பதையும் தாண்டி, சமீப காலங்களில் ரசிகர்கள் கொண்டாடும் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் லிஸ்ட்டில் ‘ஜருகண்டி’யும் நிச்சயம் இணையும். முதலில், சமீபமாக நல்ல படங்களாக ரிலீஸ் ஆகி, ரசிகர்களை திரையரங்குகளுக்கு அழைத்து வருவதை பார்க்கையில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தனித்துவமான கதைகளை ரசிகர்கள் கொண்டாடும்விதம் எனக்கு மிகப் பெரிய நம்பிக்கையை தருவதோடு, ‘ஜருகண்டி’ இந்த சீசனில் ரிலீஸ் ஆவதற்கு மிகப் பொருத்தமான படம் என உறுதியாக நம்ப வைக்கிறது…” என்றார் தயாரிப்பாளர் நிதின் சத்யா.

அவரது மிக நெருங்கிய நண்பரும், நாயகனுமான நடிகர் ஜெய் பற்றி நிதின் சத்யா கூறும்போது, “இந்த படத்தின் மூலம் ஜெய் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாங்கள் நெருங்கிய நண்பர்களாக இருப்பது இந்த படத்துக்கு எந்த வகையிலும் தடையாக இல்லை.

உண்மையில், அவர் முன்பு இருந்ததைவிட அதிக பொறுப்புடனும், கவனத்துடனும் செயல்பட்டார். படப்பிடிப்பு முழுவதும் நல்ல முறையில் நடக்க முழு ஒத்துழைப்பை கொடுத்தார். அவர் தன்னை ஒரு சிறந்த நடிகனாக மேம்படுத்த மிகவும் முயற்சிகள் எடுத்து நடித்திருக்கிறார்…” என்றார்.

மற்ற நடிகர்கள் பற்றி நிதின் சத்யா கூறும்போது, “படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களை முழுக்க முழுக்க ரசிக்க வைக்கும். ரெபா மோனிகா ஜான் பக்கத்து வீட்டு பெண் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் மிகவும் ட்ரெண்டியாக நடித்திருக்கிறார், இது உடனடியாக பார்வையாளர்களை ஈர்க்கும்.

டேனியல் ஆன்னி போப், ரோபோ ஷங்கர், இளவரசு, போஸ் வெங்கட், ஜி.எம்.குமார் என எல்லோரும் அவர்களின் தனித்துவமான பாணியில் நடித்து நிரூபித்துள்ளனர். போபோ சசியின் இசையில் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது, அவரது பின்னணி இசையும் படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்..” என்றார்.