‘8 தோட்டாக்கள்’ டைரக்டர் ஸ்ரீகணேஷின் அடுத்த படம் ‘குருதி ஆட்டம்’!

கடந்த வருடம் வெளியான படங்களில் பெரிதும் பாராட்டப்பட்ட படம் ‘8 தோட்டாக்கள்’. அந்தப் படத்தின் இயக்குநரான ஸ்ரீகணேஷ் தமிழ்த் திரை யுலகின் எதிர்கால இயக்குநர்களில் மிக முக்கியமானவராக வருவார் என்கிற கணிப்பும் ஏக மனதாகவே இருந்தது. இருக்கவும் செய்கிறது. இப்போது அவர் தன்னுடைய அடுத்தப் படத்தைத் துவக்கியிருக்கிறார். அவருடைய அடுத்த படத்துக்கு ‘குருதி ஆட்டம்’ என பெயரிட்டுள்ளார்.

இந்தப் படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்க உள்ளார். ராக் போர்ட் எண்ட்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டி.முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஐ.பி.கார்த்திகேயன் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள்.

இந்தப் படம் பற்றிப் பேசிய இயக்குநர் ஸ்ரீகணேஷ், “இந்தப் படம் முழுக்க, முழுக்க மதுரை மாநகரின் பின்னணியில் உருவாகும் படமாகும். Commercial மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் படம் இது. ஒரு வெற்றி படத்துக்கு உரிய அத்தனை அம்சங்களும் இந்த படத்தில் இருக்கும்.

நாளுக்கு நாள் தன்னுடைய கதாநாயகன்  அந்தஸ்த்தை உயர்த்தும் அதர்வா இந்த படத்தின் கதாநாயகன், அவருடைய முழு திறமைக்கும் தீனி போடும் படமாக ‘குருதி ஆட்டம்’ அமையும். கதாநாயகி தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த மாதத்தின் இறுதியில் படப்பிடிப்பு துவங்கும்..”  என்றார் இயக்குநர் ஸ்ரீகணேஷ்.