பெற்றோரை காப்போம்’ விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் இயக்குநர்..!

Am.Rm பிலிம்ஸ் தயாரிக்கும்  புதிய திரைப்படம் ‘அரளி’. இப்படத்தில் நாயகனாக மதுவும், நாயகியாக மஞ்சுளாவும் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில்  இயக்குநர் சுப்பாராஜும், இயக்குநரின் தந்தையான அண்ணாமலையும் இணைந்து  நடித்துள்ளனர். 

இப்படத்திற்கு  G.S.ஜான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு – ராஜேஷ், கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் மற்றும் தயாரிப்பு A.R.சுப்பாராஜ். 

எப்போதும் சினிமாவில் மகன் நடிப்பதற்கு ஆசைப்பட்டால் தந்தைதான் கடன் வாங்கியாவது படம் தயாரிப்பார். ஆனால், இந்த ‘அரளி’ பட இயக்குநரான சுப்பாராஜோ சற்று வித்தியாசமானவர். தன் தந்தையின் நிறைவேறாத சினிமா கனவை நிறைவேற்ற, தனது தந்தையை கதையின் நாயகனாக வைத்து படம் தயாரித்துள்ளார்.

பெற்றோர்கள்தான்  ஒரு குழந்தை நல்லவனாக வளர்வதற்கும் தவறான பாதையில் செல்வதற்கும் காரணம் என்னும் கருத்தை மையமாக  கொண்டு நகர்கிறது இந்த ‘அரளி’ திரைப்படம்.

DSC_5859 (FILEminimizer)

இந்தப் படத்தையொட்டி ‘பெற்றோரை காப்போம்’ என்கிற கருத்தை வலியுறுத்தி சென்னையில் இருந்து கன்னியாகுமரிவரையிலும் சைக்கிளில் பயணம் செய்யப் போகிறாராம் இயக்குநர் சுப்பாராஜ்.

இதன் துவக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ராதாரவி, இயக்குநர், எடிட்டர் மோகன், ஜாக்குவார் தங்கம், கரிகாலன், பழம்பெரும் கதாசிரியர் ஆரூர்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து சைக்கிள் பயணத்தை தொடங்கி வைத்தார்கள்.

இந்த விழாவில் இயக்குநர் சுப்பாராஜின் குணத்தையும், உழைப்பையும் பாராட்டி பேசிய நடிகர் ராதாரவி, “நான் விரைவில் ஒரு படம் தயாரிக்கவுள்ளேன். அந்தப் படத்திற்கு இயக்குநராக இந்த ‘அரளி’ பட இயக்குநரான சுப்பாராஜுவையே ஒப்பந்தம் செய்வேன்…” என்று மேடையிலேயே உறுதி அளித்தார்.