‘சவரக்கத்தி’ படம் தயாரான பின்னணி! – விளக்குகிறார் டைரக்டர் ஆதித்யா!

இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜி.ஆர்.ஆதித்யா இயக்குநராக அறிமுகமாகும் படம் `சவரக்கத்தி’ வரும் வெள்ளிக் கிழமை ரிலீஸாக இருக்கிறது. இயக்குநர் ராம் – பூர்ணா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் இயக்குநர் மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். லோன் வோல்ப் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் மிஷ்கின் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அரோல் கோரெலி இசையமைத்திருக்கிறார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார் மிஷ்கின். சமீபத்தில் இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை பல ஹாலுவுட் படங்களை வெளியிட்ட க்ரைக்ஸ் சினி கிரியேஷன்ஸ் கைப்பற்றியிருக்கிறது. கிராம பின்னணியில் உணர்ச்சிப்பூர்வமான த்ரில் கதையாக உருவாகி வரும் இந்த படத்தின் இயக்குநர் அதித்யாவிடம் பேசிக் கொண்டிருந்ததிலிருந்து கிடைத்த தகவலிது:

”என்னோட சொந்த அண்ணன்தான் மிஷ்கின் என்றாலும், என்னை தன் கிட்டே அசிஸ்டெண்டா சேர்க்கறதுக்கு முன்னடி தீ குளிக்காத குறையா சில பல டெஸ்ட் வச்சுதான் எடுத்துக்கிட்டார். அப்பாலே நான் எந்த கதை எழுதினாலும் மிஷ்கின் சாருடன் டிஸ்கஷன் பண்ணுவேன். அப்படி இந்தப் படத்துக்கு முன்பு வேறொரு படத்துக்கான ஸ்க்ரிப்டை எழுதி அவர்ட்ட படிக்கக் கொடுத்தேன். அந்த சமயத்தில், ‘ஒரு பார்பரை வெச்சு படம் பண்ணினால் என்ன’னு எனக்கு தோணின ஐடியாவை சார்ட்ட சொன்னேன். ‘நல்லாயிருக்கே’னு அவருக்கும் தோணியிருக்கு. பிறகு இரண்டு பேரும் டிஸ்கஷ் பண்ணி, ஒரு ரவுடி, ஒரு முடி திருத்துநர், அவருடைய காது கேட்காத மனைவினு மூணு பேரையும் சுற்றி அழகான ஒரு லைன் கிடைச்சுது. பிறகு நாங்க இரண்டுபேருமே டிஸ்கஷ் பண்ணி இந்த ஸ்கிரிப்டை எழுதி முடிச்சோம்.

என்னதான் செல்போன், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் , இன்ஸ்ட்ராகிராம் என்றும் டெக்னாலஜி வந்தாலும் சலூன் கடைகள்தான் அரசியல், சினிமா, விலைவாசி..னு பலதுறைகளைச் சேர்ந்த செய்திகள் பரிமாறப்படும் முக்கியமான இடமா இருக்கு. வீட்டுக்குள் வந்து விழும் நியூஸ் பேப்பரை புரட்டி முழுசாக படிப்பவர்களில் பலர் சலூன் கடைக்கு போனால் ஒட்டு மொத்த பேப்பரையும் – அதுவும் வரி விளம்ம்பரம் உள்பட படிப்போர் அதிகம். அதே சமயம் ஒரு சலூன் கடைக்காரர் காலையில் கடையை திறந்ததுல இருந்து நைட் கடையை மூடுற வரை அதுதான் அவருடைய உலகம். அவருக்கு எல்லா விஷயங்களும் தெரியும். எல்லா டெய்லி பேப்பர்களும் அங்கு இருக்கும்.

அவைகளை அவன் படிக்கிறானோ.. இல்லையோ.. அங்க வர்றவங்க முழுசா படிச்சு எல்லா செய்திகளை சத்தமா பரிமாறறதால அவனை அறியாமலேயே ஒரு புது உலகத்தை அவன் கத்துக்கிட்டே இருக்கான். இதை கவனத்துலே கொண்டே இந்தக் கதையோட ஹீரோவா பார்பரையும், கதைக்களமா சலூன் கடையையும் தேர்ந்தெடுத்தோம். அப்படிப்பட்ட இந்தக் கதையின் ஹீரோவான பிச்சை என்கிற சலூன் கடைக்காரர். வெளியில் ஒரு பிரச்னையை எதிர்கொள்கிறார். ஆனால் அவரால் அதை சமாளிக்க முடியலை. அதை அவர் எப்படி சமாளிச்சு மீண்டார் என்பதுதான் படத்தின் கதை. அதே சமயம் இந்தக் கதையை சீரியஸாக அணுகாமல் காமெடி லைனில் சொல்லி இருக்கோம். அந்த காமெடி டயலாக்குகளை செதுக்க நாங்க மெனக்கெட்டது தனி காமெடி ட்ராக்.

இதுக்கிடையிலே இந்தக் கதையை எழுதி முடிச்சதும் இதில் யாரை நடிக்க வைக்கலாம்னு நிறைய யோசனை. அந்த சமயத்தில்தான் இயக்குநர் ராமின் ‘தங்கமீன்கள்’ படம் பார்த்தேன். ராம் எங்கள் ஆபீஸூக்கு அடிக்கடி வந்து போறவர். அப்பதான் இந்தக் கேரக்டருக்கு அவரை ஏன் கேட்கக்கூடாதுனு தோணுச்சு. ஆமாம் ‘பிச்சை’ கேரக்டருக்கு அவர்தான் சரியான சாய்ஸ்னு முடிவு பண்ணினோம்.

ஆனாலும் ராமை சம்மதிக்க வைச்சு ஒரு மாசம் ஆடிஷன் பண்ணினோம். அவருடைய உடல் மொழியை மாற்றினோம். தங்க மீன்கள்ல அவர் நடிச்சிருந்தது அவருடைய இயல்பான உடல் மொழி. ஆனால் இதில் அவரின் உடல்மொழி முழுக்கவே காமெடியாக இருக்கிற மாதிரி மாத்தினோம். சும்மா.. சொல்லக் கூடாது.. ராம், நாங்கள் சொல்றதை அப்படியே ஃபாலோ பண்ணினார். உண்மையைச் சொல்றதா இருந்தா, அந்தக் கேரக்டரையும் ராமையும் பிரிச்சுப் பார்க்க முடியாத அளவுக்கு செட்டாயிட்டார்.

அப்புறம் இந்த காது கேளாத பூர்ணாவுக்கான கேரக்டருக்குதான் ரொம்ப கஷ்டப்பட்டோம். அவர்கிட்டே அப்ரோச் பண்றதுக்கு முன்னாடி இந்தக் கேரக்டருக்கு ஏழு ஹீரோயின்கள்ட்ட இந்தக் கதையை சொன்னோம். கதை எல்லாருக்குமே பிடிச்சிருந்துச்சு. ஆனால், இந்த படத்தில் ஹீரோயினுக்கு இரண்டு கை குழுந்தைகள் இருக்கும். அதனால் இந்தக் கேரக்டரில் நடிக்க யாருமே முன் வரலை. அந்த சமயத்தில்தான் எதேச்சையா மீட் பண்ணின இடத்துலே பூர்ணாவிடம் கதையை சொன்னோம். சொன்னதுமே, ‘நான் நடிக்கிறேன்’னு ஒப்புக்கிட்டாங்க.

‘மங்கா’ என்ற கேரக்டரில் மிஷ்கின் வில்லனா நடிக்கிறார். முதலில் இந்த கேரக்டருக்கு வேறு சிலரைத்தான் யோசிச்சோம். ஆனால், யாருமே அந்தளவுக்கு செட்டாகலை. பிறகு இவரையே நடிக்க வெச்சிட்டோம். மிஷ்கின், நல்ல நடிகர். ஒரு விஷயத்தை அழகாக எக்ஸ்ப்ளைன் பண்ணுவார். இதில் அவருடைய லுக்கை மாற்றியிருக்கோம். ரொம்பப் புதுசா இருக்கும். படத்தில் நானும் சின்ன கேரக்டரில் நடிச்சிருக்கேன். இதுக்கு முன்ன, ‘துப்பறிவாளன்’ படத்திலும், அதன்பிறகு ‘பேரன்பு’ படத்தில் மம்முட்டி சாரின் தம்பியாவும் நடிச்சிருக்கேன்.

இந்த மிஷ்கின் சார் படங்கள் எல்லாத்திலும் இரவு நேரத்தில் ஷூட் பண்ணப்பட்ட காட்சிகள் நிறைய இருக்கும். ஆனால் இதில் முழுப் படத்தையும் பகலில்தான் ஷூட் பண்ணினோம். காலையில் ஆறு மணிக்கு ஆரம்பித்து மாலை ஆறு மணிக்கு முடியும் கதை. அதாவது, ஒரு நாள் கூத்து” என்று சொல்லி வீட்டு எதிரிலிருந்த கண்ணாடி கிளாசில் இருந்த டீயை குடித்தார்.

கொஞ்ச நேரத்தில் தொடர்ந்த அவர், “எங்கள் வீட்டில் எப்போதும் இன்ஸ்பிரேஷனான மனிதர் அவர். நிறைய புத்தங்கள் படிப்பார். அவரிடம் நிறைய காமெடிகள் எதிர்ப்பார்க்கலாம். நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர். அண்ணனாக இருந்தாலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரை சார் என்றுதான் கூப்பிடுவேன். மற்ற உதவி இயக்குநர்களைப் போல்தான் என்னையும் நடத்துவார். அவரிடம் பாராட்டும் திட்டுகளும் நிறைய வாங்கியிருக்கேன். கடுமையான வார்த்தைகளால்கூட திட்டியிருக்கிறார். ஆனாலும் மோதிர விரல் குட்டு, நல்லதுதானே.” என்று சொல்லும் போது உள்ளே வந்த மிஷ்கின் “ இந்த படம் ரிலீசாகட்டும்.. அப்புறம் ஆதித்யா அண்ணன் மிஷ்கின் -னு சொல்லுவாங்க” என்று வாழ்த்து சொல்லி விட்டு போனார்