என் படுக்கையில் பங்கு கேட்ட தமிழ் தயாரிப்பாளர்! ஸ்ருதி பகீர்

சினிமா வாய்ப்பு தேடி வரும் பெண்கள், பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பது பல வருடங்களாகவே செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது. தமிழ், ஹிந்தி சினிமா உலகில் உள்ள பல நடிகைகள், தாங்கள் திரைத்துறை வந்த போதும், அதன் பின்பும் பாலியல் தொந்தரவுகளை சந்தித்ததாக ஏற்கனவே கூறியிருந்தனர்.

அதிலும் திரையுலகில் பாலியல் ரீதியாகப் ஆண்கள் பாதிக்கப்படுவதும் கூட சர்ச்சையுடன் பேசப் பட்டது. அதே சமயம் இந்த . பிரச்னைகளை வெளியே சொல்ல முடியாமல் உடல்ரீதியாகவும் மனதளவிலும் மிகுந்த வலியைச் சுமந்துகொண்டு திரையில் தோற்றமளிக்கின்றனர் பலர். இந் நிலையில் தனக்கு ஏற்பட்ட கொடிய அனுபவம் ஒன்றை நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

நெருங்கி வா முத்தமிடாதே, நிபுணன், சோலோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ருதி ஹரிஹரன் மலையாள, கன்னடத் திரையுலகில் நிறைய படங்களில் நடித்துவருகிறார். இந்தியா டுடே குழுமம் சார்பில் ஹைதராபாத்தில் நடத்தப்பட்ட ‘சௌத் இந்தியன் கான்க்லேவ் 2018’ நிகழ்ச்சியில் ‘செக்ஸிசம் இன் சினிமா – ஆணாதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் நேரம்’ என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில், படத் தொகுப்பாளர் பீனா பால், நடிகைகள் ப்ரணீதா சுபாஷ், ஸ்ருதி ஹரிஹரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய அவர், “அன்று எனக்கு 18 வயது. என்னுடைய முதல் கன்னடப் படத்திலேயே எனக்கு பாலியல் தொந்தரவு ஏற்பட்டது. அது மிகப் பெரிய வேதனையையும் வலியையும் ஏற்படுத்தியது. நான் அழுதுகொண்டிருந்தேன். இது பற்றி என்னுடைய டான்ஸ் மாஸ்டரிடம் சொன்னேன். அதற்கு அவர், ‘இந்தப் பிரச்சினையை உன்னால் சமாளிக்க முடியாவிட்டால் இதில் இருந்து வெளியேறி விடு’ என்றார். பின், நான் நடித்த கன்னடப் படம் ஒன்று மிகப் பெரிய வெற்றி பெற்றது. அந்தப் படத்தின் தமிழ்த் தயாரிப்பு உரிமையை ஒரு தயாரிப்பாளர் வாங்கினார். கன்னடத்தில் நான் நடித்த அதே பாத்திரத்தில் எனக்கு வாய்ப்பு வழங்குவதாக அந்தத் தயாரிப்பாளர் கூறினார். படத்தை இன்னும் நான்கு பேர் சேர்ந்து தயாரிக்க உள்ளதாகவும், அவர்களுக்குத் தேவைப்படும்போது என்னைப் பரிமாறிக்கொள்ளச் சம்மதித்தால் வாய்ப்புத் தருவதாகக் கூறினார். உடனே நான் என்னுடைய செருப்பை எடுத்து அவரிடம் காண்பித்தேன். இந்தச் சம்பவம் திரையுலகில் மிக வேகமாகப் பரவியது. பல தயாரிப்பாளர்கள் அந்தத் தயாரிப்பாளரிடம் போன் செய்தும், நேரில் சென்றும் சம்பவத்தைப் பற்றிக் கேட்டுள்ளனர். என்னிடமும் நடந்த சம்பவத்தைப் பற்றிக் கேட்டார்கள். அவரிடம் சொன்னதை அப்படியே நான் சொன்னேன். இதனால் எனக்கு தமிழில் நல்ல வாய்ப்பு கிடைக்கவே இல்லை” என்று கூறியுள்ளார்.