மோடி கம்முன்னு இருக்கறது தப்புதானே? – பிரகாஷ் ராஜ் வேதனை!

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் பெங்களூரில் சமீபத்தில் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு குடும்ப நண்பர் ஆவார்.கவுரி சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த அவர், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறுகையில், கவுரி கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி ஆழ்ந்த மவுனத்தை கடை பிடிக்கிறார். அவர் என்னை விட மிகச் சிறந்த நடிகராக உள்ளார் என கூறினார். பிரகாஷ்ராஜின் இந்த பேச்சுக்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் மோடியை தரக்குறைவாக விமர்சித்திருப்பதாக கூறி லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தன் மீதான வழக்கை கண்டு பயப்பட போவதில்லை என்றும் தொடர்ந்து இந்தப் பிரச்சினையில் மோடியின் மெளனம் பற்றிப் பேசுவேன் என்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:

நான் பிரதமர் மோடிக்கு எதிரானவன் என்கிறார்கள். பிரதமர் மோடி இந்த நாட்டின் பெரும்பாலான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர். இந்த நாட்டின் குடிமகன் மற்றும் நடிகர் என்ற முறையில் அவருடன் மாறுபட எனக்கு உரிமை உள்ளது.அவர் கட்சியை சார்ந்தவர் அல்ல. மதச்சார்பற்ற இந்தியாவின் பிரதிநிதியாக இருப்பவர். ஜனநாயக நாட்டில் அவர் கவுரி கொலை விவகாரத்தில் மவுனமாக இருப்பதை பொறுப்புள்ள குடிமகன் என்ற முறையில் என்னால் ஏற்றுக் கொள்ளவும் அமைதியாக இருக்கவும் இயலவில்லை.

நான் ஜனநாயகத்தை நம்புகிறேன். இந்த நாட்டில் நடப்பதில் இருந்து நான் பாடம் கற்றுள்ளேன். எனவே எனக்கு எப்போது, எங்கே அவசியம் என்று தோன்றுகிறதோ அப்போது நான் தொடர்ந்து பேசுவேன். என் மனதில் பட்டதை துணிந்து சொல்வேன். எனது கருத்தை வெளியிட உரிமையும், சுதந்திரமும் உள்ளது.

நான் இப்படி பேசுவதால் அரசியலுக்கு வரப் போவதாக சிலர் நினைக்கலாம். நான் அரசியலுக்கு வர விரும்பினால் நேரடியாக உங்களிடம் வந்து விடுவேன். எனது விருப்பத்தை உங்களிடம் வெளியிடுவேன். நான் உலக மனிதனாக வாழ விரும்புகிறேன். மனிதனாக செயல்படவே ஆசைப்படுகிறேன் -இவ்வாறு நடிகர் பிரகாஷ் ராஜ் கூறினார்.