ஆரம்பச்சதிலிருந்து முடியும் வரை காமெடிதான் = ‘ மரகத நாணயம்’

ஆக்சஸ் பிலிம் ஃபேக்டரி சார்பாக ஜி. டில்லி பாபு தயாரிக்க சரவன் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ரானி மற்றும் பலர் நடிக்கும் ‘மரகத நாணயம்’ படம் ஜுன் 16ம் தேதி தமிழ்நாடு முழுவதும் சுமார் 300 தியேட்டர்களில் வெளியாக உள்ளது.நகைச்சுவை, த்ரில்லர், ஃபேன்டஸி கலந்த படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. அறிமுக இயக்குனர் சரவன் தான் இயக்கியுள்ள முதல் படத்திலேயே படத் தயாரிப்பாளருக்கு திருப்தியளிக்கும் விதத்தில் இப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.

வரும் வெள்ளிக்கிழமையான  ஜுன் 16ம் தேதி ஐந்து படங்கள் வெளிவந்தாலும் ‘மரகத நாணயம்’ படம் மட்டும்தான் அதிகமான தியேட்டர்களில் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படம் இதற்கு முன் வந்ததில்லை என்று சொல்லுமளவிற்கு படத்தைப் பார்த்த அனைவரும் பாராட்டியுள்ளார்கள் என்கிறார் படத்தின் தயாரிப்பாளர் டில்லிபாபு.

முன்னதாக இப்படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணனிடம் கேட்ட போது, “1100, 1992 மற்றும் 2016 என 3 காலகட்டத்தில் இக்கதை நடைபெறும். 1100 காலத்தில் நடைபெறுவது மட்டும் அனிமேஷன் முறையில் உருவாக்கி இருக்கிறோம். தங்கம் மற்றும் வைரம் ஆகியவற்றை தேடுவதை வைத்து நிறைய படங்கள் வந்துவிட்டன. ஆகையால் தான் இதில் மரகதத்தை பின்னணியாக வைத்து உருவாக்கி இருக்கிறேன்.

ஆதி அணி, ஆனந்த்ராஜ் அணி என இருவருமே தேடிச் செல்வார்கள். அந்த மரகத நாணயம் யாருக்கு கிடைத்தது என்பது தான் திரைக்கதை. அதை அவர்கள் அடைவதற்கு செய்யும் விஷயம் தான் இப்படத்தில் புதிது. ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை அனைத்துக் காட்சிகளும் காமெடி பின்னணியிலே இருக்கும்.

எப்போதுமே இயக்குநர் ஷங்கர் சார் தினசரி நாளிதழ்களில் வரும் செய்திகளை படித்தாலே, அதிலிருந்து சுவாரசியமான கதைகளை உருவாக்கலாம் என்று சொல்லியிருக்கிறார். அப்படி நான் படித்த ஒரு செய்தி தான் இத்திரைப்படம். ஆனால், அந்த செய்தி இப்படி நடந்தால் எப்படியிருக்கும் என்று எனது கற்பனையை கலந்திருக்கிறேன்” என்று தெரிவித்திருந்தாராக்கும்