எல் 2 எம்புரான் எப்படி இருக்கு ?

இயக்குனர் – பிரித்விராஜ் சுகுமாரன்
நடிகர்கள் – மோகன்லால் , பிரித்விராஜ் , மஞ்சு வாரியர் , டோவினோ தாமஸ் , சுராஜ்
இசை – தீபக் தேவ்
தயாரிப்பு – ஆசீர்வாத் சினிமாஸ், கோகுலம் , லைகா பிக்சர்ஸ்

நடிகராக இருந்து இயக்குநராகி லூசிஃபர் மூலம் இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த பிரித்திவிராஜ் இயக்கத்தில் அதன் அடுத்த பாகமாக வந்துள்ள படம் தான் எம்புரான்

மோகன் லாலை மையமாக வைத்து ஒரு பாகுபலி ல், கேஜிஎஃப் பாணி படத்தை தர முயன்றுள்ளார்கள்.

லூசிஃபர் படம் ஒரு ஆச்சரியம் கேரள அரசியலை மையமாக வைத்து அதில் அழகாக மோகன்லாலின் ஹீரோயிசத்தை நுழைத்து அசர வைத்த படம். இந்த முறை அதை உலக அளவில் சொல்ல முயற்சி செய்துள்ளார்கள்.

கேரளாவில் முதல்வர் மறைவுக்குப் பிறகு மாநிலத்தில் ஏற்படும் அரசியல் குழப்பங்களை தீர்த்து வைக்கும் நாயகன் , முதல்வரின் மற்றொறு மகனை புதிய முதல்வராக்கிவிட்டு கேரளாவில் இருந்து வெளியேறுவது போல் ‘லூசிஃபர்’ முடிவடையும். அதன் தொடர்ச்சியான இதில், மோகன்லால் மூலம் முதல்வரானவர் மதத்தை வைத்து அரசியல் செய்யும் தேசிய கட்சி ஒன்றுடன் கூட்டணி அமைத்துக் கொள்வதால் மீண்டும் கேரள அரசியலில் குழப்பம் ஏற்படுவதோடு, மாநிலத்திற்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகிறது. இதனால், மீண்டும் கேரளா வரும் நாயகன் தனது அதிரடி நடவடிக்கை மூலம் பிரச்சனைகளை எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதையும், அவரது சர்வதேச மாஃபியா வாழ்க்கையையும் விரிவாக சொல்வது தான் இந்த ‘எல்2 : எம்புரான்’.

முதல் பாகத்தில் மாநில அரசியல் பேசிய இயக்குநர் பிரித்விராஜ் சுகுமாரன், இந்த இரண்டாம் பாகத்தில் தேசிய அரசியலுடன், கேரளா போன்ற மாநிலங்களை ஆக்கிரமிக்க திட்டமிடும் தேசிய கட்சிகளின் நடவடிக்கை மற்றும் மத அரசியலின் பாதிப்புகள் பற்றி பேசியிருப்பதோடு, அதை பான் இந்தியா ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதத்தில் மிக பிரமாண்டமாகவும், ஸ்டைலிஷாகவும் கையாண்டிருக்கிறார்.

திரைக்கதை அமைத்த விதம் பரபரப்பாகவே இருக்கிறது. அவர் சலார் படத்தில் நடித்ததன் பாதிப்பு படத்தின் மேக்கிங்கில் தெரிகிறது.

குரேஸி ஆப்ராம் என்கிற ஸ்டீபன் நெடும்பள்ளி பாத்திரத்தில் மோகன்லால், அந்த கதாப்பாத்திரம் உலகளவிலான டான், அதைத் தாங்கும் ஒரே நடிகன் நான் தான் என்பது போல நடித்துள்ளார். அவரது ஸ்டைலீஷ் ஸ்வாக் அவரது ரசிகர்களுக்கு விருந்து. சண்டைக்காட்சிகளிலும் மிரட்டியிருக்கிறார். ஆனால் எல்லாம் கொஞ்சம் ஓவர்டோஸ் ஆகிவிட்டது.

முதல் பாகத்தில் மோகன்லாலின் சேவகனாக ஒருசில சண்டைக்காட்சிகளில் மட்டும் வந்த பிரித்விராஜ் சுகுமாருக்கு இதில் பின்னணி கதையுடன் கொஞ்சம் பெரிய பாத்திரம்.
சையத் மசூத் பாத்திரத்திற்கு வரும் பின் கதை படத்திற்கு உதவியாக அமைந்துள்ளது.

மஞ்சு வாரியர் மிடுக்காக வருகிறார், டோவினோ தாமஸ்க்கு எதிர்பாராத வில்லன் வேடம் அதை சரியாக செய்துள்ளார். அபிமன்யு சிங், இந்திரஜித் சுகுமாரன், கிஷோர், சுராஜ் வெஞ்சரமூடு, சானியா ஐயப்பன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்கள்.

இசையமைப்பாளர் தீபக் தேவின் பின்னணி இசை மாஸ் காட்சிகளில் அதிரடி காட்டியுள்ளார். ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ், ஒவ்வொரு ஃபிரேம்களையும் பிரம்மாண்டமாக காட்ட வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்திருக்கிறார் ஒரு ஹாலிவுட் படத்தை பார்க்கும் பிரம்மாண்டத்தை திரையில் கொண்டுவந்துள்ளார் . ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் வெளிநாட்டு காட்சிகளை கையாண்ட விதம் ஹாலிவுட் படம் பார்க்கும் உணர்வை கொடுக்கிறது.

2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தோடு தொடங்கும் கதையை, ‘லூசிஃபர்’-ன் தொடர்ச்சியாக கையாண்ட விதம், மோகன்லாலின் நிழல் உலகத்தையும், அதன் நடவடிக்கைகளையும் காட்சிப்படுத்திய விதம் மற்றும் கதாபாத்திரங்களை கையாண்ட விதம் என படம் முழுவதையும் மிக பிரமாண்டமாக கையாண்டிருக்கும் இயக்குநர் பிரித்விராஜ் சுகுமாரன், திரைக்கதையில் மட்டும் கேஜிஎஃப் பாணியை நம்பிவிட்டார். அது பார்க்கும் போது அயர்ச்சியைத் தருகிறது.

முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியால் இரண்டாவது பாகத்தை இன்னும் பிரம்மாண்டமாக்கும் முயற்சித்ததில் இயக்குநர் பிரித்விராஜ் சுகுமார் பாதி வெற்றி பெற்றிருக்கிறார்.

‘எல்2: எம்புரான்’ பாதி வெற்றி

error: Content is protected !!