எம்.ஜி.ஆர். பார்முலாவை கண்டுப் பிடித்த ப. நீலகண்டன்!

பழம்பெரும் இயக்குனர் ப.நீலகண்டனுக்கு இன்னிக்கு பிறந்த நாள்…!

அதை ஒட்டி நம் கட்டிங் கண்ணையா கலெக்ட் செய்து கொடுக்கும் சிறப்பு சேதி இதோ:

இப்போ கோலிவு அப்படீன்னு சொல்லப்படும் தமிழ் சினிமாவின் தனி சாதனைப்படைத்த நாயகர் எம் ஜி ஆர்.. பின்னாளில் தலைவராக உருமாறிப் போன எம் ஜி ஆர் நடிகர் மட்டுமல்ல. தயாரிப்பாளரும் கூட. தயாரிப்பாளர் மட்டுமா? இயக்குநரும் கூட. ஒரு படத்தின் வெற்றிக்கு என்னென்ன தேவை என்பதை கவனத்தில் கொண்டு செயல்படுபவர். அப்படி அவர், கதைக்கு எவையெல்லாம் தேவை என்று சேர்த்தாரோ… வெகுஜன மக்களை எந்தந்த விஷயங்கள் ஈர்க்கும் என்று கணக்கிட்டுக் கணித்தாரோ… அந்த விஷயங்கள்தான் ஒரு சினிமாவுக்கான வெற்றி ஃபார்முலா என்று உருவானது. அவைதான்… ‘எம்ஜிஆர் ஃபார்முலா’ என்று கொண்டாடப்பட்டது. அங்ஙனம் எம்ஜிஆரையும் எம்ஜிஆர் ஃபார்முலாவையும் மிக இயல்பாக உள்வாங்கி ரசிகர்களிடம் கொண்டு போய்ட் சேர்த்து பல வெற்றிப் படங்களை எம்.ஜி.ஆர் மூலம் கொடுத்தவர். ப.நீலகண்டன்.

விழுப்புரத்தில் 1916ம் ஆண்டு அக்டோபர் 2ந் தேதி பிறந்தார். கலைமீது ஆர்வம் கொண்ட நீலகண்டன் நாடகங்களுக்கு கதை, வசனம் எழுதினார் அவர் எழுதிய நாம் இருவர் நாடகத்தை ஏ.வி.மெய்யப்ப செட்டியார் படமாக தயாரித்தார். வேதாள உலகம் படத்திற்கு வசனம் எழுதினார். அண்ணாதுரையின் ஓர் இரவு படத்தின் மூலம் இயக்குனர் ஆனார்.

1957ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடித்த சக்ரவர்த்தி திருமகள் படத்தை இயக்கினார். தொடர்ந்து நீதிக்கு தலைவணங்கு, நேற்று இன்று நாளை, ராமன் தேடிய சீதை, சங்கே முழுங்கு, குமரிகோட்டம், நீரும் நெருப்பும், ஒரு தாய் மக்கள், என் அண்ணன், மாட்டுக்கார வேலன், கணவன், காவல்காரன், கொடுத்து வைத்தவள், திருடாதே, படங்களை இயக்கினார். எம்.ஜி.ஆர் இயக்கிய உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படங்களில் அவருடன் இணை இயக்குனராக பணியாற்றினார்.

எம்.ஜி.ஆரை கமர்ஷியல் ஹீரோவாக்கியதில் நீலகண்டனுக்கு பெரும் பங்கு உண்டு. அதாவது ஒரு கதையை எடுத்துக் கொண்டு, அதை மக்களுக்குப் புரியும் வகையில் படமாக்குகிற வித்தையில் நீலகண்டன் கில்லாடி என்று எம்ஜிஆரால் புகழப்பட்டார். அந்தக் கதைக்குள் எம்ஜிஆருக்குத் தேவையான விஷயங்களை, பார்க்கிறவர்களுக்கு உறுத்தாமலும் அதேசமயம் பிரச்சார பில்டப்புகள் என்று தெரியாத வகையிலும் மிக நேர்த்தியாக திரைக்கதையில் தூவிக்கொண்டே வருவார் நீலகண்டன்.கடைசிவரை எம்.ஜி.ஆருடன் நட்பாக இருந்த நீலகண்டன், அவரிடம் எந்த உதவியையும் கேட்டு பெற்றதில்லை. (கட்டிங் கண்ணையா)

புகழ்பெற்ற பூம்புகார் படத்தை இயக்கினார். 1991ம் ஆண்டு வெளிவந்த தெய்வ திருமணங்கள்தான் இவர் இயக்கிய கடைசி படம். இதில் மீணாட்சி கல்யாணம் பகுதியை நீலகண்டன் இயக்கினார். எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குனராக இருந்தாலும் சிவாஜி நடித்த முதல் தேதி, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படங்களையும் இயக்கினார். 1992ம் ஆண்டு செப்டம்ர் 3ந் தேதி மறைந்தார். திரையுலகில் பல சாதனைகளை படைத்த ப.நீலகண்டனின் 104வது பிறந்த நாள் இன்று.