சென்னையில் உருவான முதல் தமிழ் பேசும் பட தயாரிப்பாளர் சிவகங்கை ஏ.நாராயணன் !

நூறாண்டுகளைக் கடந்து விட்ட சினிமாவின் வளர்ர்ச்சிகளில் பலரின் அயராத உழைப்பும் அடங்கிக் கிடக்கிறது. இப்போது புதுசாக மார்கெட்டுக்கு வந்த ஒரு கேமரா-வை அல்லது டெக்னால்ஜி வசதியை ஆன் லைபில் ஆர்டர் செய்து அடுத்த நாளே உபயோகிப்போர் அதிகம் என்றாலும் முன்னொரு கால சினிமா வளர்ச்சியை பலரும் மறந்து போவதுதான் சோகம். அந்த வகையில் 1930-களில் தொடங்கி 1940-கள் வரையிலும் ரசிகர்களின் ரசனை பக்திமயமாக இருந்தது ஒருபக்கம். அதே சமயம் பேசும்படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்களோ பாம்பே, கல்கத்தா ஸ்டுடியோ முதலாளிகளின் பிடியில் இருந்தார்கள். ஒரு பேசும் படத்தை எடுக்க, அந்தப் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர், நளபாக கோஷ்டி, இன்ன பிற செட் சாமான்களையும் ஏற்றிக்கொண்டு பெரும் குழுவாக ரயிலில் நான்கு நாள் பயணம் செய்ய வேண்டியிருந்தது. பெரிய குழுவைக் கட்டி இழுத்துச் செல்வதும் பராமரிப்பதும் படத் தயாரிப்பாளருக்குப் பெரிய சுமையாக இருந்தது.

இதனால் பேசும்படங்கள் வந்துவிட்ட பிறகும் பலர் மவுனப் படத் தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினர். மவுனப் படக் காலத்தில், தமிழர்கள் உள்ளிட்ட தென்னிந்தியத் தயாரிப்பாளர்கள் ஒரு கட்டத்துக்குமேல் பாம்பே, கல்கத்தா ஸ்டூடியோக்களைச் சார்த்திருக்கவில்லை. ஆனால், பேசும் படங்கள் உருவாக்க சவுண்ட் கேமராவும் சவுண்ட் நெகட்டிவ் அச்சிடும் இயந்திரங்களும் தேவைப்பட்டன.

அவை பாம்பே, கல்கத்தா முதலாளிகளிடமே இருந்தன. இவர்கள் அநியாயக் கட்டணங்களைத் தென்னிந்தியப் படங்களுக்கு வசூலித்தனர். “மதராஸிகளுக்கு நம்மை விட்டால் வேறு வழியில்லை” என்ற மனப்பாங்கு அவர்களிடம் இருந்தது. இதைக் கண்டு பொங்கியெழுந்து தமிழகத்தின் முதல் பேசும் பட ஸ்டுடியோவை (சவுண்ட் ஸ்டுடியோ) அமைத்தவர்தான் சிவகங்கை ஏ. நாராயணன்

கொஞ்சம் விளக்கமா சொல்வதானால் ஊமைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வந்த அக்காலத்தில், ஒரு முழு நீள ஊமை படத்தை தயாரிப்பதற்கான அன்றைய செலவு, அதிகபட்சம் ரூ.5000 முதல் 6000/- வரை. ஆனால் திரைப்படங்களின் மீது காதல் கொண்டு திரிந்த ஒருவர், தான் விரும்பியபடி படம் தயாரிக்க அதிகட்சமாக செலவிட்டார். ”ஜி.டபிள்யூ.எம்.ரேனால்டு எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட மிங்கிரேலியத் தாரகை அல்லது லைலா என்ற 20 ரீல்கள் கொண்ட திரைப்படம், முழுக்க முழுக்க சென்னையில் தயாரிக்கப்பட்டது. இதற்காக அதன் தயாரிப்பாளர் செலவழித்த தொகை எவ்வளவு தெரியுமா?… ரூ.75,000/- இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஊமைப் படங்கள் எதற்கும், இவ்வளவு தொகை செலவிடப்பட்டதாக புள்ளிவிவரம் இல்லை. அந்த தயாரிப்பாளர்தான் சிவகங்கை ஏ.நாராயணன். முதல் தமிழ் பேசும் படத்தை தயாரித்த பெருமைக்குரியவர்.

சிவகங்கையில் ஜனவரி 1900 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு நடுத்தரமான குடும்பத்தில் பிறந்த ஏ.நாராயணன், ஒரு பி.ஏ.பட்டதாரி. சினிமா தொழிலுக்கு வருவதற்கு முன்னர் பம்பாயில் ஒரு வங்கியில் இன்சூரன்ஸ் ஏஜென்ட்டாக பணியாற்றியவர். ஆங்கிலப் படங்களின் விநியோகஸ்தர்களான கே.டி.சகோதரர்களோடு இவருக்கு தொடர்பு ஏற்பட்டது. 1922-ஆம் ஆண்டு கல்கத்தாவில் ‘க்வின்ஸ் சினிமா’ என்ற டாக்கீஸை நடத்தினார். பின்னர் சென்னை வந்து திருவல்லிக்கேணியில் இவர் பாப்புலர் சினிமாவை (ஸ்டார் டாக்கீஸ்) நடத்தினார்.

அதே சமயத்தில் ஆங்கில மொழி துண்டுப் படங்களையும், டிராமாக்களையும் சென்னையில், தான் நடத்தி வந்த ‘எக்ஸிபிடர்ஸ் பிலிம் சர்வீஸ், சென்னை’ என்ற கம்பெனி மூலம் விநியோகம் செய்து வந்தார். 1927 ஆம் ஆண்டு சென்னை தண்டையார் பேட்டையில், ‘ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற பெயரில் ஒரு சினிமா ஸ்டுடியோவை துவக்கினார். மூன்று ஆண்டுகளில் (1927-30) இவர் 20 க்கும் மேற்பட்ட ஊமைப் படங்களைத் தயாரித்ததாக தெரிகிறது. இதனால் தென்னிந்திய பிலிம் தொழிலின் தந்தை என ஏ.நாராயணன் அழைப்படுகிறார்.

நாராயணன் தமது படங்களை, தம் சொந்தக் கம்பெனியான எக்ஸிபிடர்ஸ் பிலிம் சர்வீஸ் மூலமாகவும், அதன் பம்பாய், டில்லி, ரங்கூன், சிங்கப்பூர் கிளைகள் மூலமாகவும் விநியோகம் செய்தார். கல்கத்தாவில் அரோரா பிலிம் கார்ப்பரேஷன், வங்காள விநியோகத்தை மேற்கொண்டது. 1928 ல் ஹாலிவுட் சென்றார்.

இந்த நாளில்தான் மிங்கிரேலியத் தாரகை அல்லது லைலா 20 ரீல்களில் சென்னையில் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படம் ஒரே நேரத்தில் சென்னை வெலிங்டன் தியேட்டரிலும், பம்பாய் சூப்பர் சினிமாவிலும், ரங்கூன் சினிமா டி-பாரிஸ் தியேட்டர்களிலும் திரையிடப்பட்டு 6 வாரங்கள் தொடர்ந்து ஓடி சாதனை படைத்த வெற்றி படமாகும். நேர்த்தியான இதன் தயாரிப்பிற்காக நாராயணன், பத்திரிக்கைகளால் அந்நாளில் பெரிதும் பாராட்டப்பட்டார்.

1929-ல் நாராயணன் கோவலனும் காற்சிலம்பும் என்ற ஒரு ஊமைப்படத்தை இயக்கினார். இப்படத்திற்கான வெளிப்புறக் காட்சிகள் சென்னை துறைமுகத்தில் படமாக்கப்பட்டன.

விவசாய உணர்வு என்ற 8000 அடி துண்டு படத்தை, இம்பீரியல் கெமிக்கல் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டிற்காக இவர் தயாரித்தார். பிரசவமும குழந்தை நலனும், மேக நோய் (பால்வினை நோய்) ஆகிய டாக்குமென்ட்ரி படங்களை சென்னை பொது சுகாதார இலாகாவிற்காக தயாரித்து கொடுத்தார். 1929-ல் சென்னையில் செயல்பட்டுவந்த வர்மா எண்ணெய் கம்பெனிக் கிடங்கு தீப்பற்றி பலமணிநேரம் எரிந்தது. இதை டாகுமெண்டரி படமாக எடுத்து வெளியிட்டார் ஏ.நாராயணன்.

வெறும் திரைப்படத் தயாரிப்பாளர் இயக்குனர் என்ற அளவில் தன் சினிமா ஆர்வத்தை நிறுத்திக்கொள்ளாத ஏ. நாராயணன், ‘ஹிந்து’ நாளேட்டில் சினிமாவைப் பற்றிய கட்டுரைகள் பல எழுதி வெளியிட்டு, மக்கள் மத்தியில் மௌனப் படத்தின் கலை நுணுக்கங்களை பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்தியவர்.

முதன்முதலாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு படத்தை வெளிநாட்டில் திரையிட்ட பெருமையும் ஏ.நாராயணனையே சாரும். அனார்கலி என்ற மௌனப் படத்தை எடுத்து சென்று அமெரிக்காவின் ஹாலிவுட் நகரில் அமெரிக்கர்களுக்கு திரையிட்டு காட்டினார்.

நாராயணனுக்கு ஈடான திறமையும், சினிமா மீது பெரிதும் ஆர்வமும் கொண்டவரான அவரது துணைவியார் மீனாம்பாள், ஐந்து படங்களுக்கு ஒலிப்பதிவு செய்தவர் என்பது வரலாறு நினைவுபடுத்தாமல் விட்ட செய்தி. சினிமா படங்களுக்கு ஒலிப்பதிவு செய்த முதல் இந்திய பெண்மணி மீனாம்பாள் நாராயணன்.

சிறந்த இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் விளங்கிய ஏ.நாராயணனிடம் பயிற்சி பெற்று பின்னாளில் பிரபல டைரக்டர்களாக உருவெடுத்தவர்கள் பலர். அவர்களில் ஆர்.பிரகாஷ், ஜித்தன் பானர்ஜி, பி.சி.புல்லையா போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

ஆக.. தமிழ் சினிமா உலகம் மறந்த ஒரு முன்னோடியான ஏ.நாராயணன் . 1939 ஆம் ஆண்டு, இதே பிப்ரவரி மாதம் 1 ஆம் நாள் எதிர்பாராதவிதமாக மறைந்தார்.