‘எனை சுடும் பனி’ படத்துக்கு பூஜை போட்டாச்சு!

எஸ்.என்.எஸ்.பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘எனை சுடும் பனி.’ இந்தப் படத்தில் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே ‘டீ கடை பெஞ்ச்’ என்கிற படத்தில் இரண்டாவது கதாநாயகனாகவும், ‘என் காதலி சீன் போடுறா’ படத்தில் முக்கியமான போலீஸ் அதிகாரி வேடத்திலும் நடித்தவர். இந்தப் படத்தில் கதாநாயகனாக பதவி உயர்வு பெற்றிருக்கிறார். இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் சி.ஐ.டி. அதிகாரியாக வேடமேற்கிறார். கதாநாயகிகளாக உபாசனா, சுமா பூஜாரி ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சிங்கம் புலி, மனோபாலா, சித்ரா லட்சுமணன், ‘தலைவாசல்’ விஜய், கானா சரண் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – வெங்கட், இசை – அருள்தேவ், பாடல்கள் – ராம் ஷேவா வசந்த், கானா சரண், கலை இயக்கம் – அன்பு, நடன இயக்கம் – சாண்டி, சிவசங்கர், லாரன்ஸ் சிவா, சண்டை இயக்கம் – டேஞ்சர் மணி, தயாரிப்பு மேற்பார்வை – ஜீவா, தயாரிப்பு -எஸ்.என்.எஸ் பிக்சர்ஸ், எழுத்து, இயக்கம் – ராம் ஷேவா.

எனை சுடும் பனி படம் பற்றி இயக்குநர் ராம் ஷேவா பேசும்போது, “சின்ன வயதிலிருந்தே ஒன்றாக படித்து பழகியவர்கள் நாயகன் வெற்றியும் நாயகி உபாசனாவும். உபாசனா தானே முயற்சி செய்து உழைத்து தன் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்கிறார். வெற்றி சாதாரண நிலையில் இருந்தாலும் இருவருக்குள்ளும் காதல் ஏற்படுகிறது. இவர்களுக்கு நடுவே வில்லனாக ஒருவன் வருகிறான். அதற்கு பிறகு இவர்களது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் என்ன என்பதுதான் திரைக்கதையின் சுவாரஸ்யம்.

இந்த திரைக்கதையில் நடந்த ஒரு கிரைம் சம்பவத்தை பாக்யராஜ் எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதும் படத்தில் இருக்கும் இன்னொரு கதை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா, பொள்ளாச்சி, நெல்லியம்பதி மற்றும் அம்பாசமுத்திரம் போன்ற இடங்களில் நடக்க உள்ளது…” என்றார் இயக்குநர் ராம் ஷேவா.

இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு இன்று காலையில் பிரசாத் லேப்பில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது.

இந்த விழாவில் நாயகன் வெற்றி, நாயகிகள் உபாசனா, சுமா பூஜாரி, நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான சித்ரா லட்சுமணன், கில்டு அமைப்பின் தலைவரான ஜாக்குவார் தங்கம், நடிகை லேகா ராஜேந்திரன், இயக்குநர் ராம் ஷேவா மற்றும் பல நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டனர்.