தமிழ்ச் சினிமாவின் தற்போதைய சூப்பர் ஸ்டாரினியான நயன்தாராவின் நடிப்பிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அவர் நடிப்பில் அடுத்து வரும் படமான ‘ஐரா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் மூலம் எதிர்பாராத எதிர்பார்ப்பு உண்டாகி இருக்கிறது. குறிப்பாக இத்திரைப்படம் அவரது முதல் இரட்டை வேட படம் என்பதால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது. ‘அறம்’ படத்தை தயாரித்த கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கொட்டபாடி ஜே.ராஜேஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் நயன்தாராவுடன் கலையரசன், யோகி பாபு, ஜே.பி. ஆகியோருடன் மற்றும் பலர் நடித்து உள்ளனர்.
ப்ரியங்கா ரவீந்திரன் திரைக்கதை அமைக்க, கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசை அமைக்க, சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில், கார்த்திக் ஜோகேஷ் படக் தொகுப்பு செய்ய, ‘அவள்’ படத்தின் கலை இயக்குநர் சிவசங்கர் அரங்கு அமைக்க, சண்டை இயக்கத்தை மிராக்கிள் மைக்கேல் ராஜ் மேற்கொள்ள.. ப்ரீத்தி நெடுமாறன் ஆடை வடிவமைப்பை செய்கிறார். நடன இயக்கத்தை விஜி சதீஷ் மேற்கொள்கிறார். தாமரை, மதன் கார்க்கி, கு.கார்த்திக் மூவரும் பாடல்களை எழுதியுள்ளனர். ஒலிப்பதிவை ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி கையாண்டிருக்கிறார். டி.ஏழுமலை நிர்வாக தயாரிப்புப் பணியினை மேற்கொண்டுள்ளார்.
‘லட்சுமி’, ‘மா’, ஆகிய குறும் படங்களையும், ‘எச்சரிக்கை… இது மனிதர்கள் நடமாடும் இடம்’ என்ற திரைப்படத்தையும் இயக்கிய இயக்குநர் சர்ஜூன் இந்தப் படத்திற்கு கதை அமைத்து, வசனம் எழுதி இயக்குகிறார்.
நேற்று மாலை வெளியான இத்திரைப்படத்தின் ‘மேகதூதம்’ சிங்கிள் பாடல் அதன் இசை மற்றும் உணர்ச்சியைத் தூண்டிவிடும் பாடல் வரிகளுக்காக இசை ரசிகர்களுக்குப் பெரிதும் பிடித்துப் போயிருக்கிறது. இதனால் ஒட்டு மொத்த ‘ஐரா’ குழுவும் அதீத உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
இந்த பாடல் ஏன் ‘பவானியின் கீதம்’ என்று கூறப்படுகிறது என்பதை இயக்குனர் கே.எம். சர்ஜூன் விளக்கும்போது, “இந்த பாடலை ஏற்கனவே கேட்டவர்கள் எளிதாக இதை கண்டு பிடித்திருப்பார்கள் என நம்புகிறேன். ‘பவானி’ என்ற கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்தும் பாடல். அவளுடைய கனவுகள், அபிலாஷைகள், தனக்கு பிடித்த ஆன்மாவுடனான மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கைக்காக ஏங்குவது போன்றவற்றை வெளிப் படுத்தும் பாடல் இது. பத்மப்ரியா ராகவன், தாமரை, சுந்தரமூர்த்தி ஆகியோரின் சிறப்பான முயற்சிகளை பாராட்டுகிறேன். ஸ்லோ பாய்ஸனாக ரசிகர்கள் மனதில் இறங்கிக் கொண்டிருக்கும் இந்த அழகான பாடலை கொடுத்த மூவரையும் பிரித்து பார்க்க முடியாது.
தாமரை எப்பொழுதும் உணர்ச்சிகளின் அமுதம். அவரின் பாடல் வரிகள் மூலம் நிபந்தனை யற்ற அன்பின் மேன்மையை உயர்த்துவார். பாடல் உருவாக்கும்போது சுந்தரமூர்த்தி பாடல் வரிகளும், குரலும் மிக தெளிவாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனம் செலுத்தினார். இதனால் மென்மையான இசையை இழை விட்டிருந்தார். அதுதான் பாடலில் தாக்கத்தை தீவிரப்படுத்தியது.
பாடலின் வெற்றிக்கு பத்மப்ரியா ராகவனின் பங்கும் மிக முக்கியமானது. காட்சிகளும், பாடலின் சூழ்நிலையும் மற்றும் நயன்தாராவின் பிரம்மாண்டமான திரை ஆளுமையும் பாடலுக்கு கூடுதல் மைலேஜாக இருக்கும் என நம்புகிறேன்…” என்றார்.
நயன்தாராவின் நடிப்பைப் பற்றி அவர் கூறும்போது, “இது அவரது 63-வது திரைப்படமாகும். இந்தப் படத்தை இயக்கும் போது அவரது நடிப்பை ஒரு ரசிகராக பார்த்து வியந்தேன். அவர் தன் நடிப்பை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்கிறார். இந்த படத்தில் நயன் தாராவை இரு பரிமாணங்களில், குறிப்பாக ‘பவானியின்’ கதாபாத்திரத்தை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைவார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.