நெல்லை சங்கர் பாலிடெக்னிக்கின் முன்னாள் மாணவர்களான 50 பேர் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘நெடுநல்வாடை’. இந்தப் படத்தில் ‘பூ’ ராமு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், இளங்கோ, அஞ்சலி நாயர், அஜய் நடராஜ், மைம் கோபி, ஐந்து கோவிலான், செந்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தயாரிப்பு – பி-ஸ்டார் புரொடக்ஷன்ஸ், இயக்குநர் – செல்வக்கண்ணன், இசை- ஜோஸ் ஃபிராங்க்ளின், ஒளிப்பதிவு – வினோத் ரத்தினசாமி, பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து, படத் தொகுப்பு – மு.காசி விஸ்வநாதன், கலை இயக்கம் – விஜய் தென்னரசு, சண்டைப் பயிற்சி – ராம்போ விமல், நடன இயக்கம் – தினா, சதீஷ் போஸ், மக்கள் தொடர்பு – மணவை புவன்.
2000-ம் ஆண்டு நெல்லை சங்கர் பாலிடெக்னிக்கில் படித்தவர் இந்தப் படத்தின் இயக்குநரான செல்வக்கண்ணன். இவருடன் படித்த நண்பர்களில் 90 சதவிகிதம் பேர் தற்போது இந்தியா விலும், வெளிநாடுகளிலும் பெரிய நிறுவனங்களில் பொறியாளர்களாக வேலை செய்கிறார்கள்.
காந்தி கிருஷ்ணா, சாமி, ராஜேஷ் எம்.செல்வா ஆகிய இயக்குநர்களிடம் உதவி இயக்கு நராகப் பணியாற்றிவிட்டு, மற்றவர்கள் போலத் தனியாகப் படம் இயக்க தயாரிப்பாளர்களின் அலுவலகப் படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தார் செல்வக்கண்ணன்.
இதை அறிந்த அவரது வகுப்புத் தோழர்களில் இருவர் ஒவ்வொருவரையும் தொடர்பு கொண்டு தங்களுடைய நண்பர் செல்வக்கண்ணனின் இயக்குநர் ஆசையை பரிமாற ஆரம்பித்தார்கள். உடனே வாட்ஸ் அப்பில் ஒரு குழு உருவாக்கி மொத்த மாணவர்களும் தங்கள் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை செல்வக்கண்ணன் இயக்கும் படத்துக்கு முதலீடு செய்வதாக உறுதி அளித்தார்கள். இது கதையல்ல நிஜம்.
இந்த உறுதிமொழியில் இருந்து கடந்த ஒரு வருடத்தில் ஒருவர்கூட பின் வாங்காததால் அவர்களுடைய ஒத்துழைப்புடன் நெடுநல்வாடை திரைப்படம் உருவாகியிருக்கிறது. இப்போது சினிமாவில் வழக்கமாக சந்திக்கும் சில சங்கடங்களைக் கடந்து ‘நெடுநல்வாடை’ திரைப்படம் வரும் மார்ச் மாதம் திரைக்கு வருகிறது.
படத்தின் கதை குறித்துப் பேசிய இயக்குநர் செல்வக்கண்ணன், “மகன் வழிப் பேரன், பேத்தி களுக்குக் கிடைக்கும் சொத்துரிமை, அங்கீகாரம் சமூகத்தில் மகள் வழி உறவுகளுக்கு கிடைப்பதில்லை. குறிப்பாக ஈமக் கடன்களில்கூட அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதை இந்தப் படத்தில் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறேன்.
இன்னொரு பக்கம் காதல் தோல்விகளில் எப்போதும் பெண்கள் மட்டுமே குற்றவாளிகள் போல், துரோகம் இழைத்தவர்கள் போல் சித்தரிக்கப்படுகிறார்கள். அவர்கள் தரப்பில் இருக்கும் யதார்த்ததை, நியாயத்தையும் பேசி இருக்கிறேன். இரண்டும் வெவ்வேறு விஷயங்கள் போல் தோன்றலாம். ஆனால் ‘நெடுநல்வாடை’யில் இவையிரண்டையும் சரிசமமாக கலந்து, இணைக்கோட்டில் பயணித்து பார்க்கிறவர்களைக் கலங்கடிக்கும் …” என்றார் செல்வக்கண்ணன்.
தொழில்நுட்பக் கலைஞர்கள்
தயாரிப்பு : பி-ஸ்டார் புரொடக்ஷன்ஸ்
இயக்குநர் : செல்வகண்ணன்
இசை : ஜோஸ் ஃபிராங்க்ளின்
ஒளிப்பதிவு : வினோத் ரத்தினசாமி
பாடல்கள் : கவிப்பேரரசு வைரமுத்து
படத்தொகுப்பு : மு.காசிவிஸ்வநாதன்
கலை : விஜய் தென்னரசு
சண்டை பயிற்சி : ராம்போ விமல்
நடனம் : தினா, சதீஷ்போஸ்
மக்கள் தொடர்பு : மணவை புவன்.