இன்னமும் தலைப்பிடப் படாத ’அஜித் 59’ படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள் பட்டியல்!

விஸ்வாசம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் குமார் நடிக்கும் அடுத்த படத்தை பே வியூ ப்ரொஜெக்ட்ஸ் எல் எல் பி என்கிற நிறுவனத்தின் சார்பில் போனி கபூர் தயாரிக்க, வினோத் குமார் இயக்க உள்ளார் என்பது அறிந்ததே. 2019 ஆம் ஆண்டின் கோடை விடுமுறையில் வெளியிட வேண்டும் என்கிற உத்வேகத்துடன் படப்பிடிப்பு குழுவினர் படத்தை துவக்க உள்ளனர் . ஒரு படத்தின் வெற்றிக்கு அந்த படத்தின் நடிக, நடிகையர் , தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் முக்கியம் என்று கூறுகிறார் தயாரிப்பாளர் போனி கபூர்.

இது குறித்து அவர் மேலும் விவரித்த போது, “அஜித் குமாருடனான எனது நட்பு ,அவர் மறைந்த எனது மனைவி ஸ்ரீதேவியுடன் “இங்கிலீஷ் விங்கிலிஷ்” திரைப்படத்தில் நடிக்கும் போது தொடங்கியது. தனது தாய் மொழியான தமிழில் ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்றும் அதில் அஜித் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்கிற தனது விருப்பத்தை அவர் எதேச்சையாக அஜித் குமாரிடம் கூறி உள்ளார். நிச்சயமாக என்று கூறிய அஜித் சொன்னவாறே எங்களை தமிழில் படம் தயாரிக்க அழைத்தார். ஸ்ரீதேவி உயிரோடு இருந்த போதே நாங்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு , தற்போது உள்ள சூழ்நிலையில் சமூகத்துக்கு தேவையான படத்தை வழங்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். நாங்கள் தேர்ந்து எடுத்த கதையின் கருத்து மீது ஸ்ரீதேவி மிகுந்த நம்பிக்கை வைத்து இருந்தார். அவருடைய கனவை நனவு ஆக்கும் சீரிய முயற்சியில் படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் ஒன்று இணைந்து இருப்பது என்னை பெருமிதத்தில் ஆழ்த்துகிறது.அஜித் குமாருடனான தொழில் முறையான எங்கள் உறவு இந்த படத்துடன் நில்லாமல் , ஜூலை 2019 இல் துவங்கி ஏப்ரல் 2020 இல் வெளியிட திட்டமிட்டு இருக்கும் எங்களது நிறுவனத்தின் மற்றொரு படத்தின் மூலமும் தொடர இருக்கிறது.

நான் சினிமாவை விரும்பி பார்ப்பவன் என்கிற முறையில் ஒரு படத்தை பார்ப்பதற்கு முன் அந்த படத்தின் போஸ்டர் வாயிலாக அந்த படத்தின் நடிக, நடிகையர், தொழில் நுட்ப கலைஞர்கள் யார் என்பதை உன்னிப்பாக கவனித்தே முடிவு எடுப்பேன். அந்த வகையில் என் படத்துக்கு வரும் ரசிகர்களும் நம்பிக்கையோடு வர திறமையான team வேண்டும் என்று விரும்பினேன். அவ்வாறே அமைந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி. இயக்குநர் வினோத் அவருடைய முந்தைய படங்களின் முலம் தனது பன்முக திறமையை காட்டி விட்டார். அவருடைய தொழில் பக்தியும், எண்ணத்தில் இருப்பதை திரையில் கொண்டு வர எடுக்கும் சிரத்தையும் மிக மிக பாராட்டுக்குரியது. கதை என்ன பின்னனியில் அமைந்தாலும் இசை அந்த பின்னணிக்கு வலு சேர்க்கும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவன்.அந்த வகையில் என்னை மிகவும் ஈர்த்த இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

தனது நடிப்பு திறமையால் நாடெங்கும் எண்ணற்ற ரசிகர்களை கொண்ட வித்யா பாலன் இந்த படம் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகிறார். அஜித் குமாருக்கு ஜோடியாக நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் நிச்சயம் பேசப்படும். வளர்ந்து வரும் நடிகைகளில் திறமையான ஒருவர் என்று கணிக்க படும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் படத்தின் மைய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தனது திறமையான வாதிடும் திறமையால் எல்லோரையும் கவர்ந்த ரங்கராஜ் பாண்டே இந்தப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் நடிகராக அறிமுகமாகிறார். இவர்களுடன் அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியாங், மற்றும் பலர் நடிக்க உள்ளனர்.

இன்னமும் தலைப்பிட படாத இந்த படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவாளர் -நீரவ் ஷா.
கலை இயக்குநர்- கே கதிர்.
சண்டை பயிற்சி- திலிப் சுப்புராயன்.
படத்தொகுப்பு. கோகுல் சந்திரன்.
நிர்வாக தயாரிப்பு- பி ஜெயராஜ்.
ஆடை வடிவமைப்பு – பூர்ணிமா ராமசாமி” என்று தெரிவித்துள்ளார்.