‘புளூ சட்டை’ மாறன் மீது இயக்குநர் ஷக்தி சிதம்பரம் போலீஸ் கமிஷனரிடம் புகார்!

இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில், பிரபு தேவா நடித்து, 2002 ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டாக அமைந்த ‘சார்லி சாப்ளின்’ படத்தின் இரண்டாம் பாகம் 17 வருடங்களுக்கு பின் எடுக்கப் பட்டது. இந்த படத்திலும் பிரபு தேவா தான் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ‘சார்லி சாப்ளின் 2 ‘ என்கிற பெயரில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியான இந்த படம் குறித்த மிகவும் மோசமான வகையில் ‘ப்ளூ சட்டை மாறன் ” விமர்சித்துள்ளதாக இந்த படத்தின் இயக்குனர் சக்தி சிதம்பரம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அவருடன் தயாரிப்பாளர் சிவாவும் கமிஷனர் ஆபீஸ் வந்திருந்தார்.

ஷக்தி சிதம்பரம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருந்தது இதுதான் :

ஷக்தி சிதம்பரமாகிய நான் கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு வெற்றிகரமான திரைப்படங்கள் தயாரித்தும், இயக்கியும், தமிழ்த்திரை உலகில் நீண்ட காலமாக பணியாற்றி வருகிறேன். தற்போது பிரபல திரைப்பட நிறுவனமான அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் திரு டி. சிவா அவர்கள் தயாரிப்பில் திரு. பிரபுதேவா நடிப்பில் சார்லி சாப்ளின் 2 திரைப்படத்தை இயக்கி 25.01. 2019 அன்று தமிழகம் உள்பட உலகம் எங்கும் பல்வேறு திரையரங்குகளில் வெளியிட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கடந்த 26.01.2019 அன்று தமிழ் டாக்கீஸ் என்ற பெயரில் திரு. புளுசட்டை மாறன் என்பவர் சார்லி சாப்ளின் 2 திரைப்படத்தை You Tube- விமர்சனம் செய்ய போவதாகவும் அதில் விளம்பரம் செய்வதற்கு பெரும்தொகையை கேட்டும் வற்புறுத்தினார். திரு. புளுசட்டை மாறன் சமீபகாலமாக பல திரைப்படங்களை தவறாக விமர்சனம் செய்வதாக மிரட்டி பணம் வாங்கிய விபரம் திரையுலகினர் அறிந்ததே. ஆவே நாங்கள் விளம்பரமோ, பணமோ தர இயலாது என மறுத்ததால் மேற்படி சார்லி சாப்ளின் 2 படத்தை மிக மிக தரக்குறைவான வகையிலும் ஒருமையில் பேசியும் விமர்சனம் செய்துள்ளார்.

இதை கண்டு பேரதிர்ச்சியும், மன உளைச்சலும் அடைந்த திரையரங்கு உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் திரு புளுசட்டை மாறனின் தவறான விமர்சனத்தால் கோடிக்கணக்கில் முதலீடு செய்த அவர்களுக்கு மிகப் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று தங்களது அச்சத்தை தெரியப்படுத்தினார்கள். நான் திரு. புளுசட்டை மாறனிடம் அலைபேசியில் “ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்வதற்கு யாருக்கும் உரிமை உள்ளது. ஆனால் அதே நேரத்தில் படத்தின் மையக் கருவான வாட்ஸ்ஆப் மூலமாக அனுப்பிய குறுஞ்செய்தியை 1 மணிநேரம் 7 நிமிடத்தில் டெலிட் டெய்யலாம் என்றும் தகவலை படத்தில் தெளிவாக காட்டியிருக்கிறேன்.

ஆனால் தங்களது விமர்சனத்தில் அப்படி ஒரு விஷயத்தையே காட்டவில்லை என்று முன்னுக்கு பின் முரணாக விமர்சனம் செய்திருக்கிறீர்கள் மேலும் இயக்குனர் தயாரிப்பாளர் உட்பட படத்தின் ஒட்டு மொத்த குழுவையும் ஒருமையில் கேவலமாக வன்மையாக பேசியதையும் கடும் சொற் களை உபயோகப்படுத்தியதையும் வாபஸ் பெற வேண்டும்” என்று நாகரீகமாக கேட்டேன். ஆனால் திரு புளுசட்டை மாறன் அவர்கள் கடும் கோபத்துடன் ” இந்த நிகழ்ச்சி மூலமாக நிறைய விளம்பரம் கேட்டு சம்பாதிக்கிறேன்.

எனக்கு லாபம் கிடைக்கணும்னா அதுக்கு என்ன வேணுமானாலும் பண்ணுவேன். உன்னால முடிஞ்சத நீ பார்த்துக்கோ ” என காது கூசும் அளவிற்கு கெட்ட வார்த்தைகளை உபயோகித்ததுடன் ” என்கிட்ட மோதுனா எந்த லெவலுக்கும் போவேன் என்கிட்ட வச்சுக்கிட்ட உன்னை காலி பண்ணிடுவேன்” என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தனக்கு எனக்கு ஒரு வீயூவர்ஸ் குரூப் வைத்துக் கொண்டு, படத்தை பார்க்க கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அதை திரு புளுசட்டை மாறன் மீறியுள்ளார்.

சமூக வலைதளம் மூலம் தவறாக துஷ்பிரயோகம் செய்த தமிழ் டாக்கீஸை உடனடியாக முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல கோடி ரூபாய் முதலீடு செய்த தயாரிப்பாளர் டி. சிவா அவர்களுக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பிற்கும் எனக்கும் எங்கள் குழுவிற்கும் ஏற்பட்ட மன உளைச்சலுக்கும் திரு. புளுசட்டை மாறன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று ஷக்தி சிதம்பரம் அதில் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.