வாவ். லடாக்-கில் ஷூட் செய்த ‘ இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’

நடிகர் ஹரிஷ் கல்யாண் இளம் பெண்களின் கனவு கண்ணனாக மாறி இருக்கிறார். ஆனாலும் அவர் சாக்லேட் பாய் கதாபாத்திரங்களிலேயே நடிப்பதை விரும்பாமல், ஒவ்வொரு படத்திலும் ஒரு சவாலான கதாப்பாத்தித்தில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார். தற்போது ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார். ஷில்பா மஞ்சுநாத் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். சமீபத்தில் லடாக்கில் நடந்து முடிந்த படப்பிடிப்பு அவருக்கு மறக்க முடியாத அனுபவங்களை வழங்கியிருக்கிறது.

அது பற்றிய பேசிய ஹரிஷ் கல்யாண், “சில விஷயங்கள் நம் கண்களுக்கு சொர்க்கம் போல காட்சியளிக்கும். ஆனால் அத்தகைய இடங்களுக்கு  செல்வது சில ஆபத்தான சவால்களை உள்ளடக்கியது. நம் கற்பனைகளையும் தாண்டிய சவால்கள் அவை. லடாக்கில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது இது போன்ற அனுபவங்கள் எங்களுக்கு கிடைத்தன.

மொத்த படக் குழுவும் லடாக்கின் அழகான இடங்களில் ஒரு சில காட்சிகளை படம் பிடிக்க வேண்டியிருந்தது. அவை மிகப் பெரிய சவால்களாக இருந்தன. நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் அருகே சில காட்சிகளை படம் பிடித்து முடித்தோம். திடீரென்று, ஒரு உதவி இயக்குநரால் மூச்சு விட முடியவில்லை. உடனடியாக  மருத்துவமனைக்கு விரைந்தோம். அங்கு அவருக்கு அவசர சிகிச்சையளித்த பின்புதான் அவரால் சகஜ நிலைமைக்கு திரும்ப முடிந்தது. இதனை நேரில் பார்த்த நாங்கள் அதிர்ச்சியாகிவிட்டோம். வழக்கமாக, உயரமான பகுதிகளில் ஆக்சிஜன் குறைவாக இருக்கும். அவர் சரியான கம்பளி ஆடைகளை அணிய வில்லை, மேலும் அவரது காதுகளையும் மூடவில்லையாம், அதனால் வெளிக்காற்று அவரது நுரையீரலை பாதித்திருக்கிறது என்று மருத்துவர்கள் சொன்னார்கள்.  

இன்னொரு பக்கம் உயரமான பகுதிகளில் மலையேற்றம் செய்தது பெரும் சாதனையாகவும், வேதனையாகவும் அமைந்தது. நான் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் லடாக் அருகில் இருந்த மலைப் பிரதேசமான ரோஹ்தாங் பாஸின் பின்னணியில் படம் பிடிக்கப்பட வேண்டியிருந்தது.

அது, உயரமான இடத்தில் இருந்தது. உள்ளூர்வாசிகள் யாரும் எங்களுடன் வர விரும்ப வில்லை. எங்களையும் எச்சரித்தனர். இருப்பினும், ரஞ்சித் ஜெயக்கொடி மற்றும் ஒளிப் பதிவாளர் கவின் இருவரும் அங்கே செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். ஏனெனில் அவர்கள் இருவரும் ஏற்கனவே அந்த இடங்களுக்கு வந்திருக்கின்றனர். காட்சிக்கு ஏற்ற  அற்புதமான அழகிய பின்னணி அந்த இடத்தில் இருப்பதாக உறுதியளித்தனர்.

ஆரம்பத்தில், உள்ளூர்வாசிகள் எச்சரிக்கையை பற்றி கண்டு கொள்ளவில்லை. ரஞ்சித் பயணத்தைத் தொடர என்னை ஊக்குவித்தார். கிட்டத்தட்ட 2 மணிநேரம் மலையேறினோம். இறுதியாக, அங்கு முதல் ஆளாக நான்தான் சென்று சேர்ந்தேன். அந்த இடம் அவ்வளவு அழகாக இருந்தது, மொத்த குழுவுமே அந்த இடத்தின் அழகைப் பார்த்துவிட்டு மெய் மறந்து, பட்ட கஷ்டங்களையெல்லாம் மறந்து படப்பிடிப்பு நடித்தினோம்..” என்றார் ஹரீஷ் கல்யாண்.