‘அலிபாபாவும் 40 குழந்தைகளும்’ படத்தில் என்ன ஸ்பெஷல்?

இடியேட்ஸ் கிரியேட்டஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் போஸ் தயாரிக்கும் புதிய படம்   ‘அலிபாபாவும் 40 குழந்தைகளும்.’ இந்தப் படத்தில் புதுமுகம் போஸ் கதா நாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. மற்றும் அப்புகுட்டி, மொட்டை ராஜேந்திரன்,  தேவதர்ஷினி,  சிங்கம் புலி, மனோபாலா, மயில்சாமி மற்றும் ஏராளமான நகைச்சுவை நடிகர்களும் நடிக்க உள்ளனர்.

‘மாசாணி’, ‘ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய L.G.ரவிச்சந்தர்  கதை,  திரைக்கதை, வசனம் எழுதி இந்த படத்தை இயக்குகிறார். இவர் இயக்கியிருக்கும் ‘நான் அவளை சந்தித்தபோது’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இது இவர் இயக்கும் நான்காவது படமாகும்.

இத்திரைப்படம் பற்றி இயக்குநர் ரவிச்சந்தர் பேசும்போது, “நான் இயக்கிய மூன்று படங்களுமே வெவ்வேறு கதையம்சம் கொண்டவை. இந்த படம் முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்க உள்ளோம். ‘உழைப்பே உயர்வு தரும்’. ‘உழைக்காமல் எவராலும் முன்னேற முடியாது’ என்ற உலகம் அறிந்த உண்மை தத்துவமே இந்த படத்தின் திரைக்கதை.

இந்தப் படத்தை குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்க உள்ளோம். தமிழ்த் திரையுலக வரலாற்றில் முதல்முறையாக 40 குழந்தைகள் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள் இவர்களுடன் பேருந்து ஒன்றும் முக்கிய கதாப்பாத்திரமாக வர இருக்கிறது. இதன் படப் பிடிப்பு ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களில் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் நடைபெற உள்ளது…” என்றார் L.G.ரவிச்சந்தர்.

ஒளிப்பதிவு – சங்கர், இசை – ஜெய்குமார், பாடல்கள் – யுகபாரதி, படத் தொகுப்பு – வீரசெந்தில்ராஜ், சண்டை இயக்கம் – ‘இடி மின்னல்’ இளங்கோ, நடன இயக்கம் -தினேஷ், சிவசங்கர், மக்கள் தொடர்பு  – மணவை புவன், தயாரிப்பு மேற்பார்வை –பாண்டியன், தயாரிப்பு – இடியேட்ஸ் கிரியேட்டஸ்.