டோக்கியோ திரை விழாவில் இயக்குநர் ராஜீவ் மேனனின் ‘சர்வம் தாள மயம்’

‘மின்சார கனவு’, ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ ஆகிய வெற்றி படங்களை இயக்கிய ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன், தற்போது ‘சர்வம் தாள மயம்’ என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நெடுமுடி வேணு, அபர்ணா பாலமுரளி, வினித், திவ்யதர்ஷிணி உள்ளட்ட பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

ஒரு மிருதங்க வித்வானிடமிருந்து மிருதங்கம் கற்று கொள்ள விரும்பும் ஒரு இளைஞன் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தை சார்ந்தவன் என்பதால் அவரிடமிருந்தும், கர்நாடக இசை சமூகத்திலிருந்தும் நிராகரிக்கப்படுகிறான். இன்றைய காலகட்டத்தில் சாதி, மத பிரச்சனை களை தாண்டி அவனது இசை ஆசை வென்றதா, இல்லையா என்பதுதான் இந்த ‘சர்வம் தாள மயம்’ படத்தின் கதை.

தற்போது இத்திரைப்படம் 31-வது டோக்கியோ இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் பிரத்யேகமாக திரையிடப்படவுள்ளது.

காஷ்மீர், ஷில்லாங், ஜெய்பூர், கேரளா உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.