விஞ்ஞான அறிவையும் தாய்பாசத்தையும் கருவாகக் கொண்டு தயாராகும் ‘மேடி @ மாதவ்’

ஆன்மே கிரியேஷன்ஸ் என்கிற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அனில் குமார் மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ள திரைப்படம் ‘மேடி @ மாதவ்’ (Maddy @ Madhav). இத்திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் இந்தியில் தயாராகியுள்ளது. இந்தப் படத்தில் மாஸ்டர் அஞ்சய் கதையின் நாயகனாக நடித்துள்ளார். ‘இளைய திலகம்’ பிரபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் ‘தலைவாசல்’ விஜய், ‘நிழல்கள்’ ரவி, ரிச்சா பாலோட், வையாபுரி, முத்துக்காளை, ரியாஸ்கான், பானு பிராகாஷ், ரோஷிணி வாலியா, ஆதர்ஷ் ஆகியோருடன் ‘இனிது இனிது’ பட நாயகன் அதித் மற்றும் புதுமுகம் நேகாகான் இருவரும் இளஞ்ஜோடிகளாக நடித்துள்ளனர். அறிமுக வில்லன்களாக மும்பை நடிகர்கள் ஜுல்பி சையத், ஷாவெர் அலி இருவரும் நடித்துள்ளனர்.

 

இந்தப் படத்தின் கதை – திரைக்கதையை தயாரிப்பாளர் அனில் குமாரே எழுதியிருக்கிறார். புதுமுக இயக்குனர் பிரதீஷ் தீபு இயக்கியிருக்கிறார். ‘போக்கிரி’ திரைப்படத்தின் வசனகர்த்தாவான வி.பிரபாகர் இணை திரைக்கதை எழுதியிருக்கிறார். அஜயன் வின்செட் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத் தொகுப்பு – வி.டி விஜயன், எஸ்.ஆர். கணேஷ்பாபு, கலை இயக்கம் – தோட்டாதரணி, சண்டை இயக்கம் – அன்பு-அறிவு, நா. முத்துகுமார் – குட்டி ரேவதி இருவரும் எழுதிய பாடல்களுக்கு அவுஸா பச்சன், இஷான் ஆகியோர் இசையமைத்து உள்ளனர். நடன இயக்கம் – பிரசன்னா, மும்பை நடன இயக்குநர் ரிச்சார்ட்.

சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் ரசிக்கும்விதமாக இந்த ‘மேடி @ மாதவ்’ திரைப்படத்தின் கதையும், திரைக்கதையும் அமைக்கப்பட்டுள்ளது. வீரமும், விவேகமும் மிகுந்திருக்கும்வகையில்தான் படத்தின் நாயகனான ‘மாதவ்’ கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ‘மேடி @ மாதவ்’ திரைப்படம் விஞ்ஞான அறிவையும் – தாய்ப் பாசத்தையும் மையக் கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அரிய கண்டுப்பிடிப்பையும், இளைய சமுதாயத்தின் திறமைகளையும் ஒருங்கிணைந்து புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு முதல் விதையாக இத்திரைப்படம் அமையும்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றது. ‘மாதவ்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் மாஸ்டர் அஞ்சய், நிஜமான புலியுடன் நடித்த காட்சிகள் தொடர்ந்து எட்டு நாட்கள் படமாக்கப்பட்டன. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவா – மூணாறு – செர்ராய் கடற்கரை – நிலம்பூர் சாலக்குடி, பொள்ளச்சி, சென்னை ஆகிய இடங்களில் 100 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றுள்ளது.

படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.