சித்திரமே சொல்லடி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

சித்திரமே சொல்லடி திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இப்படத்தை, எம்,ஜி,எம் ப்ரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் கௌரி சங்கர் தயாரித்து இயக்குகிறார். இப்படத்தில் கூல் சுரேஷ் கதாநாயகனாகவும், கோபிகா நாயர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் தெனாலி, மகாநதி சங்கர், தேனி முருகன், விஜய் கணேசன், சுமதி, அஞ்சலி டேவி, அப்சர் மற்றும் பெரெரொ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஒளிப்பதிவு மகி பாலன், இசை ஆதிஷ் உத்த்ரியன். துப்பறியும் பாணியில் உருவாக்கபட்டுள்ள இப்படம் சென்னை, ஏலகிரி மற்றும் பாண்டிசேரி ஆகிய பகுதிகளில் படமாக்கப் பட்டுள்ளது. நவம்பர் படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

படத்தை பற்றி இயக்குனர் கௌரி சங்கர் கூறுகையில் “ இந்த படம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம். பெண்கள் பாலியல் தொல்லைகளிலிருந்தும், தங்களை கேலி செய்பவர்களிடமிருந்தும் தங்களை எப்படி பாதுகாத்துகொள்ள வேண்டும் என்றும் இப்படம் உணர்த்தும். “ என்று கூறியவர் தயாரிப்பாளர் சங்கத்துக்கு கோரிக்கை ஒன்றையும் வைத்தார்.

“ முன்பெல்லாம் எம்.ஜி.யார், சிவாஜி படங்கள் ரிலீஸ் ஆகும்போது மூன்று தர வரிசைகள் இருந்தன. அதில் மூன்றாவது தர வரிசையானது மிகக் குறைந்த விலையுடைய டிக்கெட்டு களாகவும், மற்ற தரவரிசைகளை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் இருக்கைகளை உடை யதாகவும் இருக்கும், இதனால் அதிகப்படியான மக்கள் திரையரங்குக்கு வந்தனர். ஆனால் இப்போது ஒரேஒரு தரவரிசை மட்டுமே உள்ளது. அதைமாற்றி மீண்டும் முதலாம், இரண்டாம், மூன்றாம் தரவரிசைகள் என்று நிர்ணயித்து நாற்பது அல்லது ஐம்பது ரூபாய்க்கு டிக்கெட்டுகளை விற்றால் அதிகபடியான மக்கள் மீண்டும் திரையரங்குக்கு வர வாய்ப்புள்ளது, திரையுலகம் மீண்டும் செழிக்க வாய்ப்புள்ளது “ என்று தனது ஆதங்கத்தையும் கூறினார்.

படத்தின் நாயகன் கூல் சுரேஷ் கூறுகையில் “ நான் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறேன். எனக்கு ஜோடியாக மலையாள நடிகை கோபிகா நாயர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த கமலி ரமேஷ்குமார், ஸ்ரீ கமலி ஆகியோர் நடித்துள்ளனர். நான் முதல்முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த கதாபாத்திரத்தை திரையில் கொண்டு வர கடினமாக உழைத்துள்ளேன். என்னை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்த இயக்குனர் கௌரி சங்கர் அவர்களுக்கு நன்றி “ என்று கூறினார்.

இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக அரவிந்தராஜ், சாட்டை அன்பழகன், ஆர்,வி, உதயகுமார். அபி சரவணன், தொட்ரா இயக்குனர் மதுராஜ், திரு.வி,க பூங்கா செந்தில் பட இயக்குனர் ஆகியோர் கலந்துகொண்டனர்.