ரொம்பவும் தனித்துவமா இருக்கும் கருப்பி’ பாடலுக்கு மெகா வரவேற்பு!

0
322

யக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகமாகும் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘கருப்பி என் கருப்பி’ வெளியாகி மிகவும் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் மாரி செல்வராஜ், விவேக் இணைந்து எழுதியுள்ள இந்த ‘கருப்பி’ பாடல் பற்றி பிரபலங்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.

இயக்குநரும், மாரி செல்வராஜின் குருவுமான இயக்குநர் ராம், இயக்குநர்கள் நவீன், புஷ்கர் காயத்ரி, பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து, பாடலாசிரியர் முருகன் மந்திரம் உள்பட பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

இயக்குநர் ராம் இந்தப் பாடல் குறித்து பேசுகையில், “என் தம்பி மாரி செல்வராஜ் முதல்முறையாக இயக்கியிருக்கும் ‘பரியேறும்  பெருமாள்’  திரைப்படத்தின்  முதல் பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது.   ‘தாமிபரணியில் கொல்லப்படாதவர்கள்’  சிறுகதைத் தொகுப்பின்  மூலமாக  அறிமுகமாகி, ‘ஆனந்த  விகடனில்’  வெளியான  மறக்கவே முடியாத  தொடரான ‘மறக்கவே நினைக்கிறேன்’ மூலம்  தமிழக  மக்களை  தன்வசப்படுத்திய  மாரி  செல்வராஜின்  முதல்  படம்.  அல்லது  முதல் கோபம்னுகூட  சொல்லலாம். 

அவனுடைய  இயலாமை,  அவனுடைய ஆற்றாமை,  அவனுக்குள்ளே இருக்கும்  ரௌத்திரம்,  உன்மத்தம், வெறி, எரிச்சல் வரலாற்றின் மீது இருந்த தீராத கோபம்.. இது எல்லாவற்றின் மொத்த  வெளிப்பாடாக இந்தப் பாடல் அமைந்திருக்கிறது. ‘பரியேறும் பெருமாள்’ கதைக்குள்ளே இருக்கும் மொத்த உணர்ச்சியும் இந்தப் பாட்டில் இருப்பதாக நான் நினைக்கிறேன்.

அந்த பாடல் வரிகளில் இருந்த கோபத்தையும், உணர்ச்சியையும் சந்தோஷ் நாராயணன் அவர் குரலிலும், இசையிலும் மிகச் சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார்.

இந்தப் படத்தைத் தயாரித்திருக்கும் இயக்குநர் தம்பி பா.இரஞ்சித் தமிழ் சினிமாவுக்கு ‘அட்டக்கத்தி’ மூலமாக அறிமுகமானார். என்னைப் பொறுத்தவரைக்கும் ‘அட்டக்கத்தி’, தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்று.

தமிழ் சினிமாவில் அதுவரை பார்த்திருக்காத ஒரு திரைமொழியையும், அதுவரை பார்க்காத ஒரு மக்களின் வாழ்வியலையும் கொண்ட படம் அது. அத்தகைய சிறப்புப் பெற்ற தம்பி பா.இரஞ்சித்தின் முதல் தயாரிப்பு இது, அவருக்கும் அவருடைய நீலம் புரொடக்சன் நிறுவனத்திற்கும் என்னுடைய வாழ்த்துகள். சந்தோஷ் நாராயணனுக்கும் எனது வாழ்த்துகள். தம்பி மாரி செல்வராஜூக்கும் என்னுடைய வாழ்த்துகள்…” என்று பெரிதும் வாழ்த்தினார்.

பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து பேசுகையில், “இந்தக் ‘கருப்பி’ பாடலில் வெளிப்படையாக  ஒலிக்கும்  வலியும்  அடிநாதமாக  கேட்கும்  விடுதலை  உணர்வும் மெய்சிலிர்க்கச்  செய்கிறது. படக் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்..” என்றார்.

’மூடர் கூடம்’ இயக்குநர் நவீன் பேசுகையில், “உள்ளுக்குள்  புதைந்து  கிடந்த  வலியை  ஒரு பாட்டாக  மாற்றியிருக்கிறார்கள். ‘கருப்பி  என்  கருப்பி’  என்  மொத்த  கவனத்தையும் திருடிக் கொண்டிருக்கிறது…” என்று பாராட்டியிருக்கிறார்.

இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி பாடல் குறித்துப் பேசுகையில், “பரியேறும் பெருமாள்’ படத்தின் ‘கருப்பி’ பாட்டு ரொம்பவும் தனித்துவமா இருக்கு. இசை, வரிகள், பாடலில் வரும் காட்சிகள் எல்லாம் ரொம்ப உயிரோட்டமா இருக்கு. படம் பார்க்க வேண்டும் என்ற ஆசையையும் தூண்டுகிறது…” என்றார்கள்.

பாடலாசிரியர் முருகன் மந்திரம் பேசுகையில், “ஒரு படைப்பு அல்லது பாடல் சாதாரணமாக ரசிகனைக் கடந்து போகக் கூடாது. கேட்பவர்களின் சிந்தனையை மாற்றணும். யோசிக்க வைக்கணும். ‘கருப்பி’ பாடல் வரிகள் நிச்சயமா கேட்கிறவங்களோட சிந்தனைக்குள்ள போய் பேசும். ஒரு உயிரை இழந்த துயரத்தின் உரையாடலாக அமைந்திருக்கிற ‘கருப்பி’ பாடலை சாதாரணமாக எவராலும் கடந்து போக  முடியாது…” என்றார்.