அன்பென்ற மழை! – பத்ம விபூஷன் இளையராஜா நெகிழ்ச்சி!

0
302
குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் பத்ம விபூஷண் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது. தேசத்தின் பெருமைமிக்க விருது நம் இளையராஜாவிற்கு விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள்  உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். இவர்களின் வாழ்த்துக்கு இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எனக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்ட நிமிடத்தில் இருந்து, இன்று வரை, என்னை நேரிலும், தொலைபேசிவாயிலாகவும், மனப்பூர்வமாகவும் வாழ்த்து தெரிவித்த, உலகெங்கிலும் பரவி இருக்கும் இசை ரசிகர்கள், அரசியல் பிரமுகர்கள், திரைத்துறையினர், தொழில்துறையினர், மீடியா அன்பர்கள் அனைவருக்கும் நன்றி.
விருது அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை நூற்றுக்கணக்கானவர்கள் தினமும் என்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த வாழ்த்தும், உங்களின் அன்பும் எனக்கு மேன்மேலும் உத்வேகத்தை தந்துள்ளது. என்னை நெகிழ வைத்துள்ளது. ஆண்டவனின் அருளாலும், உங்கள் அன்பாலும்… மக்களுக்காக என் பணியை செவ்வனே செய்து கொண்டு இருப்பேன். அன்பெனும் மழையில் நனைய வைத்த உங்கள் அனைவருக்கும் மீண்டும் மனப்பூர்வமான நன்றி.” என்று தெரிவித்துள்ளார்