சௌந்தரராஜா-வுக்கு கல்யாணம் நிச்சயதார்த்தம் ஆனது!

சுந்தரபாண்டியன் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து வரும் நடிகர் சௌந்தரராஜாவுக்கும், தொழிலதிபர் தமன்னாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

சுந்தரபாண்டியன் படத்திற்குப் பிறகு வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, தங்கரதம், தர்மதுரை, ஒரு கனவு போல, திருட்டுப்பயலே 2 உட்பட பல படங்களில் நடித்தவர் சௌந்தரராஜா. தற்போது சிலுக்குவார்பட்டி சிங்கம், ஈடிலி, கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

நடிகராக மட்டுமில்லாது, மனிதநேயம் மிக்கவராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் அவர், ஜல்லிக்கட்டு போராட்டம், மரக்கன்றுகள் நடுதல், கருவேல மரங்கள் அழித்தல் என சமூக சேவைகளையும் தொடர்ந்து செய்து வருகிறார். இயக்குநர்கள் சமுத்திரக்கனி, சசிகுமார், எஸ்.ஆர்.பிரபாகரன், சீனு ராமசாமி, நடிகர்கள் விஜய் சேதுபதி, விஷால், கார்த்தி உள்ளிட்ட பலரின் அன்புக்கு சொந்தக்காரரான சௌந்தரராஜா தற்போது திருமண பந்தத்தை தொடர்ந்துள்ளார்.

‘க்ரீன் ஆப்பிள் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருக்கும் இளம் தொழிலதிபர் தமன்னாவை திருமணம் செய்ய இருக்கிறார் சௌந்தரராஜா. இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் சிறப்பாக நடைபெற்றது. மே மாதம் மதுரை, உசிலம்பட்டியில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது.