விக்ரம் மகளை தன் கொள்ளு பேரணுக்கு மணம் செய்து வைத்தார் கருணாநிதி!

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து- சிவகாம சுந்தரியின் மகள் வழிப்பேரனும், கெவின்கேர் நிறுவனத்தலைவர் சி.கே. ரங்கநாதன்-தேன்மொழி தம்பதியின் மகனுமான மனோரஞ்சித்துக்கும், நடிகர் விக்ரம்- சைலஜா தம்பதியின் மகள் அக்‌ஷிதாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீட்டில் இன்று காலை நடைபெற்றது. திருமணத்தில் கருணாநிதி மற்றும் நடிகர் விக்ரம் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். அரசியல் கட்சியினர் யாரும் பங்கேற்கவில்லை.

இந்நிகழ்வையொட்டி காலை 9.50 மணியளவில் மணமகள் அக்‌ஷிதாவை கோபாலபுரம் இல்லத்துக்கு நடிகர் விக்ரம் காரில் அழைத்து வந்தார். மணமகளுக்கு மாலை அணிவித்து உள்ளே அழைத்து சென்றனர். காலை 10 மணியளவில் மணமகன் மனோரஞ்சித் வந்தார். அவருக்கு மாலை அணிவித்து வரவேற்று அழைத்து சென்றனர். மணமக்கள் கருணாநிதியின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். 10.25 மணிக்கு கெட்டி மேளம் முழங்க தமிழ் முறைப்படி கருணாநிதி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

திருமண விழாவில் மு.க.அழகிரி, காந்தி அழகிரி, செல்வி குடும்பத்தினர், மு.க.தமிழரசு, ராஜாத்தி அம்மாள், கனிமொழி, துர்கா ஸ்டாலின், தயாநிதிமாறன், கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் அமிர்தம், முரசொலி செல்வம், கவிஞர் வைரமுத்து மற்றும் மணமக்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்ததும் கருணாநிதியை வீல்சேரில் வைத்து வாசலுக்கு அழைத்து வந்தனர். வெளியில் கூடியிருந்த பத்திரிகையாளர்கள், பொதுமக்களை பார்த்த பிறகு மீண்டும் உள்ளே அழைத்து சென்றனர்.

உடல்நலக்குறைவால் கருணாநிதி கடந்த ஒரு ஆண்டாக ஓய்வு எடுத்து வந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந்தேதி கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் அமிர்தம் மணிவிழாவில் கருணாநிதி கலந்து கொண்டார். அதன்பிறகு அவர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை.ஒரு வருடத்துக்கு பிறகு தற்போது கொள்ளுபேரன் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..