மாதவன் – அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் சைலண்ட் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்!

மாதவன் – அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, வெளியாகியுள்ளது. காஸ்மோஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ், கிரண் ஸ்டுடியோஸ் மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரி ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. தெலுங்குலகின் மிகப் பெரிய கதாசிரியர்களில் ஒருவரானா கோனா வெங்கட், கோபி மோகன் உடன் இணைந்து இந்தப் படத்திற்கான கதை மற்றும் திதைக்கதையை எழுதுவதோடு இணை தயாரிப்பாளராக வும் பணிபுரிகிறார்.

ஒரு சைலண்ட் சஸ்பென்ஸ் த்ரில்லரான இந்த படத்தில், ATMOS ஒலி வடிவமைப்பு, பின்னணி இசை மற்றும் மிக நேர்த்தியான காட்சியமைப்புகள் என ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் உயர்ந்த தொழில் நுட்பக் கலைஞர்களை கொண்டு இதுவரை உணர்ந்திராத மிகச் சிறந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க இருக்கிறார்கள்.

கோபி சுந்தர் இசையமைக்கிறார். பாப் பிரவுன் (ப்ரிடேடர்ஸ், தி வால் மற்றும் டிரான்ஸ்ஃபார் மர்ஸ் புகழ்) சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார். க்‌ஷனம்’ மற்றும் ‘கூடாச்சாரி’ போன்ற திரைப்படங்களில் தன் ஒளிப்பதிவு மூலம் தெலுங்கு சினிமாவுக்கு ஒரு புது வண்ணத்தை வழங்கிய ஷானியேல் டியோ ஒளிப்பதிவு செய்கிறார். யனா ருசனோவா (ப்ரிசம், ட்ரோன் வார்ஸ், தி நெக்ஸ்ட் பிக் திங் புகழ்) கலை இயக்குநராகப் பணிபுரிகிறார். கோபி மோகன் திரைக்கதை எழுதியிருக்கிறார்.

மாதவன்-அனுஷ்கா ஷெட்டி ஜோடி ஏற்கெனவே 2006-ம் ஆண்டு வெளியான ‘ரெண்டு’ என்னும் தமிழ்ப் படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள். இவர்கள் 13 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்திற்காக ஜோடி சேர்ந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னமும் பெயரிடப்படாத இத்திரைப்படம் பற்றி இயக்குநர் ஹேமந்த் மதுகர் கூறும்போது, “பல வருடங்களாக நடிப்பில் மகத்தான சாதனையை புரிந்திருக்கும் மிகச் சிறந்த நடிகர்கள் இந்த படத்துக்கு கிடைத்திருப்பது, என்னை மிகக் கடுமையாக உழைக்க, அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல உந்துகிறது. குறிப்பாக, இது ஒரு சைலண்ட் சஸ்பென்ஸ் மர்டர் மிஸ்டரி திரில்லர் கலந்த படமாக இருப்பதால் அது முழுமையாக ‘நடிகர்கள்’ மற்றும் ‘தொழில் நுட்பக் கலைஞர்கள்’ சார்ந்தது, அதற்கேற்ற வகையில் சிறப்பான கலைஞர்கள் இந்தப் படத்தில் இணைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

வழக்கத்திற்கு மாறான வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் நடிகர் மாதவனின் அர்ப்பணிப்புத் தன்மை அபாரமானது. அதனால்தான் அப்படிப்பட்ட திரைப்படங்கள் அவரை விரும்புகின்றன. அவரின் சமீபத்திய கதைகளில், சிறந்த நடிகராக ப்ரீத் சீரீஸிலும், மிகக் கடுமையான பயிற்சியாளராக இறுதிச் சுற்று படத்திலும் அவர் ஸ்கோர் செய்ததை பார்த்தாலே புரியும்.

அவர் தன்னை இப்போதும் ‘சாக்லேட் பாய்’ என்று சொல்வதை விரும்புவதில்லை, மாறாக தன் திறமைகளை மேம்படுத்தும் கதைகளை நடிக்கவே விரும்புகிறார். இந்த படம் அவரது மகுடத்தில் முக்கியமான ஒன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

அனுஷ்கா ஷெட்டி தான் பங்கு கொண்ட அனைத்து படங்களிலும் தனது நடிப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி தான் ஒரு ‘அற்புதமான நடிகை’ என்று நிரூபித்தவர். இந்த படத்தில் அவரின் கதாப்பாத்திரத்துக்கு இது போன்ற குணங்கள் தேவைப்பட்டது. இந்தக் கதாபாத்திரத்திற்கு அனுஷ்காவை தவிர யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்று தோன்றியது.

அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் சுப்பாராஜு ஆகியோர் மொழி மற்றும் எல்லைகளை கடந்து தங்கள் திறமையால் பிரபலமானவர்கள். அவர்களும் இந்த படத்தில் நடிப்பது பலம்.

குறிப்பாக கோனா வெங்கட் சார் மற்றும் கோபி மோகன் சார் எழுதிய கதை மற்றும் திரைக்கதையை திரையில்  மொழி பெயர்க்கும் செயல்முறையை அனுபவிப்பதில் ஒரு இயக்குநராக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்…” என்றார்.

இந்திய அளவில் புகழ் பெற்ற இந்த நடிகர்கள் நடிக்கும், இந்தப் படத்தின் பணிகள் தற்போது முழு மூச்சில் நடந்து வருகிறது.