நடிகர் ஷாரங்க் இயக்குனராக அறிமுகமாகும் ‘நடுவன்’ படத்தில் தந்தையாக  நடிக்கும் பரத்!

நடிகர் பரத் எப்போதும் நடிப்பிற்கு மிகவும்  சவாலான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர். முதல் முறையாக, நடிகர் ஷாரங்க் இயக்குனராக அறிமுகமாகும் ‘நடுவன்’ படத்தில் தந்தையாக  நடிக்கிறார். மலைப்பகுதி பின்னணியில் அமைந்திருக்கும் இந்த திரில்லர் ட்ராமா,  ஏராளமான சவால்களை கொண்டிருந்தது. இந்த படத்தில் ஸ்டண்ட் காட்சிகளில் நடிகர்களின் அர்ப்பணிப்பு பற்றிய சில மறக்க முடியாத தருணங்களை இயக்குனர் நம்முடன் பகிர்கிறார்.
“படத்தில் உள்ள அனைவருமே ஸ்டண்ட் காட்சிகளில் மிகச் சிறப்பாக நடித்திருந்தனர். இது பரத் மற்றும் கோகுல் மட்டுமல்லாமல் நாயகி அபர்ணா வினோத் மற்றும் குட்டிப்பெண் ஆரத்யா ஆகியோரும் சண்டைக்காட்சிகளில் அவர்களே நடித்திருந்தனர். இதை செய்ய சொல்லி யாரும் திணிக்கவில்லை, டூப் கலைஞர்கள் கூட தயாராக இருந்தனர். இருப்பினும், கதை மற்றும் சூழ் நிலையின் ஆழத்தை உணர்ந்து, கதையும் அதை கோரியதால், மழை மற்றும் மூடுபனியையும் பொருட்படுத்தாமல் அந்த சவாலான காட்சிகளில் தாங்களே முன் வந்து நடித்தனர். ஒரு ஸ்டண்ட் காட்சியின்போது  நடிகர் பரத் கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. ஓய்வெடுக்க வற்புறுத்தியும், அவர் உடனடியாக படப்பிடிப்பில்  கலந்து கொண்டார். அபர்ணா வினோத் எந்தவொரு டூப்பும் இல்லாமல் சண்டைக்காட்சியில் நடிக்கும் அளவுக்கு தைரியமாக இருந்தார். ஒரே டேக்கில் ஒரு சண்டைக்காட்சியில் எந்த காயமும் படாமல் நடித்து எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இரவு நேரத்தில் ஒரு சண்டைக் காட்சியில், கோகுல் ஆனந்த தலையில் கடுமையாக அடிபட்டது. மிகவும் குளிராக இருந்தது, உண்மையில் யாராக இருந்தாலும் ஒரு பிரேக் கேட்டிருப்பார்கள். ஆனால் அவர் தொடர்ந்து காயத்துடன் நடித்தார்” என்றார்.
உறியடி மற்றும் ராட்சசன் போன்ற திரைப்படங்களில் அவரது சிறந்த சண்டைக் காட்சிகளை வழங்கிய சண்டைப் பயிற்சியாளர் விக்கி அவர்களுக்கு தான் அதிக நன்றியை தெரிவிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
நடுவன் படத்துக்கு தரண்குமார் இசையமைக்க, யுவா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கார்க்கி, டாக்டர் பர்ன் மற்றும் மிர்ச்சி விஜய் ஆகியோர் இந்த படத்தில் பாடல் எழுதியுள்ளனர்.