‘சின்ன மச்சான்’ பாடல் புகழ் செந்தில் கணேஷ் ஹீரோவாக நடிக்கும் ‘கரிமுகன்’

விஜய் டி.வியின் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் பாடகராக ‘சின்ன மச்சான்; செவத்த மச்சான்’ என்ற பாடலை பாடி முதல் பரிசு வென்றவர்கள் செந்தில் கணேஷ் – ராஜலஷ்மி தம்பதியினர். இந்தப் பாடலை எழுதியவர் செல்ல தங்கையா. அதற்கு பிறகு இந்தப் பாடல் ‘சார்லி சாப்ளின்-2’  படத்தில் அம்ரீஷ் இசையில் உருவாக்கப்பட்டது. யூ டியூப்பில் இந்தப் பாடலை இன்றுவரை 13 மில்லியன் பார்வையாளர்கள் கேட்டு மகிழ்ந்திருக்கிறார்கள். உலகம் முழுதும் பிரபலமான இந்தக் குழுவினர் இப்போது ‘கரிமுகன்’ என்ற படத்தின் மூலம் சினிமாவிலும் களமிறங்கி இருக்கிறார்கள்.

செந்தில் கணேஷ் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். காயத்ரி என்ற கேரளா பெண் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் யோகிராம், பாவா லட்சுமணன், விஜய் கணேஷ், வின்செண்ட் ராய், தீபாஸ்ரீ ரா.கா.செந்தில்… இவர்களுடன் இயக்குநர் செல்லத் தங்கையாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு – எழில் பூஜித், படத் தொகுப்பு – பன்னீர் செல்வம், கேசவன், கலை இயக்கம் – நித்தியானந்த், நடன இயக்கம் – சங்கர் R., சண்டை இயக்கம்  –   ‘திரில்லர்’ முருகன், தயாரிப்பு நிர்வாகம் – சுப்ரமணியம், தயாரிப்பு நிறுவனம் – விமல் புரொடக்சன்ஸ், செந்தூர் பிக்சர்ஸ், தயாரிப்பாளர்கள் – T.சித்திரைச் செல்வி, M.செல்வமணி, எஸ்.கார்த்திகேயன், எழுத்து, பாடல்கள், இயக்கம் – செல்லத் தங்கையா.  

படம் பற்றி இயக்குநர் செல்லத் தங்கையா பேசும்போது, “நானும் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி மற்றும் எங்கள் குழுவினர் இணைந்து நாட்டுப் புற பாடல்களை பாடி கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். எங்கள் குழுவைப் பற்றி இப்போது தமிழகத்து மக்கள் அனைவருக்குமே தெரியும்.

ஏற்கெனவே செந்தில் கணேஷை  நாயகனாக்கி ‘திருடு போகாத மனசு’ என்ற படத்தை இயக்கி வெளியிட்டேன். அதற்கு பிறகு மீண்டும் அவரை வைத்து ‘கரிமுகன்’ படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது, அவர் விஜய் டிவியின் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பெரும் புகழைப் பெற்று விட்டார். இது எங்கள் குழுவினருக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.

‘திருடு போகாத மனசு’ படத்தில் ‘கணேஷ்’ என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். இந்தப் படத்தில் ‘செந்தில்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செந்தில் கணேஷ் இந்தப் படத்தில் ஒரு எலக்ட்ரீஷியனாக நடிக்கிறார். படத்தில் இடம் பெறும் நான்கு பாடல்களில், இரண்டு பாடல்களை அவரே பாடியிருக்கிறார்.

படத்தின் கதை பற்றி சொல்ல வேண்டுமானால், முகம் தெரியாத இரண்டு பேருக்குள் நடக்கிற பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து முகம் தெரிந்த  இரண்டு பேருக்கு என்ன மாதிரியான பிரச்சினைகள் ஏற்படுகிறது என்பதும் அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வெளியே வருகிறார்கள் என்பதை கமர்ஷியல் காமெடியாக சொல்லி இருக்கிறோம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு புதுக்கோட்டை, கோட்டைபட்டினம், தேவிபட்டினம் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

‘கரிமுகன்’ படத்தின் முன்னோட்ட  வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது…” என்றார் இயக்குநர் செல்லத் தங்கையா.