இயக்குநர் விசு எழுத்தாளர்கள் சங்கத்தின் பணத்தை அபகரித்துவிட்டதாக பாக்யராஜ் போலீசில் புகார்!

இயக்குநர் விசு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் பணத்தை அபகரித்துவிட்டதாக, இயக்குநர் பாக்யராஜ் காவல் துறையில் இன்று (ஜூலை 23) புகார் அளித்துள்ளார்.

திரைப்படத்துக்கான கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதுபவர்களுக்கான சங்கமாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. அதன் தற்போதைய தலைவராக இயக்குநர் பாக்யராஜ் உள்ளார்.

இந்நிலையில் இன்று இயக்குநர் பாக்யராஜ் தலைமையில் சங்கத்தினர், சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதனிடம், இயக்குநர் விசு மற்றும் பிறைசூடன் போன்றோர் மீது புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாக்யராஜ், “தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில், சமீபமாக நாங்கள் அனைவரும் பொறுப்புக்கு வந்திருக்கிறோம். இதற்கு முன்பாக நலிந்த எழுத்தாளர்களுக்கு கல்வித் தொகை, மருத்துவ உதவி உள்ளிட்டவை செய்ததாக சொல்லப்பட்டது. நாங்கள் பொறுப்புக்கு வந்தவுடன், அந்த அறக்கட்டளை நிலைமை என்னவென்று தெரிந்து கொள்ள அனைவரையுமே அழைத்தோம்.

விசு அவர்கள் எனக்கு வயதாகிவிட்டதால், பிறைசூடனைத் தொடர்பு கொள்ளுங்கள். அவர் தான் அனைத்துப் பொறுப்புகளையும் பார்த்துக் கொண்டிருந்தார் என்றார். மற்றவர்களும் பிறைசூடன் தான் பொறுப்பு என்றார்கள். இதனைத் தொடர்ந்து ‘வாருங்கள்… இது குறித்து சங்கத்தில் பேச வேண்டும். பணமில்லை அனைத்துமே அறக்கட்டளையில் இருக்கிறது’ என்று பிறைசூடனிடம் சொன்னோம். அவர் சங்கம் வேறு, அறக்கட்டளை வேறு. இதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்றார். சங்கத்திலிருந்து தானே பணமெடுத்து அறக்கட்டளை தொடங்கினீர்கள். பிறகு எப்படி சம்பந்தமில்லை என்று சொல்லமுடியும் என்று கேட்டோம்.

அதற்கு எழுத்தாளர் பிறைசூடன், ‘நாங்கள் கல்வி உதவித்தொகை வழங்கவில்லை. நலிந்தோர்களுக்கு மட்டுமே செய்வோம். நாங்கள் ஒரு சில விதிமுறைகள் வைத்திருக்கிறோம். அதில் நீங்கள் தலையிட முடியாது’ என்றார். அதோடு சங்கத்தின் அனைத்துக் கோப்புகளையும் வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டார். அதையும் நாங்கள் பார்க்க முடியவில்லை.

மேலும் சங்கத்தின் முன்னாள் தலைவர் விசு, செயலாளர் பிறைசூடன், டிரஸ்டி மதுமிதா உள்ளிட்டோர் பொதுக்குழுவின் ஒப்புதல் இன்றி அறக்கட்டளை ஒன்றை தொடங்கி சங்கத்தின் பணம் 37 லட்சம் ரூபாயை மோசடியாக அறக்கட்டளைக்கு மாற்றியுள்ளனர். இதற்கு வேறுவழியில்லாத காரணத்தால், அவர்கள் மீது கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறோம். சங்கத்துக்காக அப்பணம் உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் புகார் அளித்திருக்கிறோம். விசாரணை செய்து தொடர்பு கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.