சரத்குமாரின் புது செயலி ஏ எஸ் கே ஆப் அறிமுகம்!!

சமீபகாலமாக நம் தமிழ் நடிகர்கள் ஒவ்வொருவரும் ஆப் எனப்படும் தனி செயலியை உருவாக்குவது பேஷனாகி வருகிறது. அண்மையில் கமல் , விஷால் போன்றோர் ஆப்ஸ் உருவாக்கி வெளியிட்ட நிலையில்  நடிகர் சங்க முன்னாள் தலைவரும் அரசியல் வாதியுமான சரத்குமாரின்  ASK என்னும்  செயலி  அதிகாரப்பூர்வமான செயலியாக நேற்று  வெளியிடப்பட்டது.  இது குறித்து விளக்கம் சொன்ன சரத் தரப்பினர், “APP எனப்படும் செயலிகள் பல்வேறு பயன்பாடு களை, தேவைகளை எளிதில் அடைவதற்கான கருவிகளாக பயன்பட்டு வருகின்றன. உதாரணமாக வாடகைக்கார் பதிவு செய்தல், பணப்பரிவர்த்தனைகள், அனைத்து விதமான பயணங்களை பதிவு செய்தல், வெளியூர்களில் தங்கும் விடுதிகள் பதிவு செய்தல், பல்வேறு தலைப்புகளிலான புத்தகங்கள் வாங்குதல், பலதரப்பட்ட பொருள்களை வாங்குதல், விற்பனை செய்தல், தொலைக்காட்சி நிகழ்வுகள், பத்திரிக்கை செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுதல் போன்ற எண்ணற்ற பயன்பாடுகளை செயலிகள் மூலம் அடைய முடியும்.

அந்த வகையில் ஒரு திரைப்பட நடிகராக, பத்திரிக்கை துறை சார்ந்தவராக, ஒரு அரசியல் இயக்கத்தை நடத்திவரும் தலைவராக, பன்முகத்தன்மை கொண்டு விளங்கும் ஆர்.சரத்குமார் அவர்கள் ஒரு செயலியின் மூலமாக அனைத்து தரப்பு மக்களோடும் நேரிடையாக தொடர்பு கொள்ளவும், கருத்துகளை பரிமாறிக்கொள்ளவும், ஒரு இணைப்புப் பாலமாகவே இந்த ASK என்னும் செயலியை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

இச்செயலி, அவ்வப்போது நிகழும் மாநில, தேச மற்றும் உலக நிகழ்வுகளையும், அவை தொடர்பான உடனுக்குடன் ஏற்படும் பதிவுகளையும், மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்ப்பதற்காகவும், ASK குழுவோடும், சரத்குமாரோடு தகவல் பரிமாற்றங்களை நேரிடையாக பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் பிரச்சனைகளை விரைவில் தீர்த்து வைக்கப்படும் களமாகவும், சமூக சீர்திருத்தத்திற்கான தளமாகவும், குடிமக்கள் எளிதில் அணுகக்கூடிய உற்ற தோழனாகவும் இச்செயலியின் செயல்பாடு அமைய உள்ளது.

பொதுமக்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் என்னென்ன, அவை எந்தெந்த வழிகளில் தீர்வு காணப்பட்டன, எத்தகைய அணுகுமுறை உபயோகப்படுத்தப்பட்டது போன்ற பல்வேறு விவரங்கள் இச்செயலியில் அடங்கி இருக்கும்.படிப்பவர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாகவும், ஊக்கமளிக்கும் விதமாகவும் இச்செயலி விளங்கும்” என்றார்கள்.