பாலுமகேந்திரா – மறக்க முடியாத படைப்பாளி!

0
351

இலங்கையில் பிறந்தவருக்கு இயக்குநர்கள் டேவிட் லீன், சத்யஜித்ரே ஆகியோர்தான் மானசீக குரு. இருந்தாலும் போட்டோகிராபியே முதல்காதல் என்பதால் பயணம் அப்படி துவங்கியது.. எழுபதுகளின் துவக்கத்தில் மலையாள படங்களை ஒளிப்பதிவு செய்தவருக்கு, மிகப்பெரிய அளவில் பேசவைத்தது சட்டக்காரி என்ற படம்.. நடிகை லட்சுமிக்கு செமபிரேக்.. முதல் கணவர் மோகன் சர்மா உடன் நடித்த படம். இயக்குனர் கே எஸ் சேதுமாதவன். 1962- ல் கமலை மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய ஜாம்பவான். தமிழில் எம்ஜிஆரை வைத்து நாளை நமதே கமலை வைத்து நம்மவர் போன்ற படங்களை பின்னாளில் இயக்கியவர்.

இப்பேர்ப்பட்ட ஜாம்பவானின் படத்தில் பணியாற்றிய பாலுமகேந்திராவுக்கு அதற்குப் பிறகு ஏறுமுகம்தான்..சட்டக்காரி படம்பின்னர் இந்தியில் ஜூலியாக எடுக்கப்பட்டு அதிலும் லட்சுமி கிளாமராக கலக்கியதில் அகில இந்திய அளவில் தாறுமாறாக ஓடியது தனிக்கதை..

போட்டோகிராபியுடன் ஏழு முகத்தைக் கண்ட பாலுமகேந்திராவுக்கு டைரக்சன் செய்யும் ஆசையும் வந்துவிட்டது. 1977-ல் டைரக்டராய் கச்சிதமாய் கன்னடத்தில் செதுக்கியபடம் கோகிலா. கமலின் இந்த படத்தில்தான் மைக் புகழ் மோகன் அறிமுகம். செம ஹிட். தமிழ்நாட்டில் முதன் முறையாக நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெள்ளிவிழாவை நெருங்கிய கன்னடபடமும் இதுதான்.

அப்படியொரு காவியத்தை பாலுமகேந்திராவுக்கு, அடுத்து திருப்புமுனையாக அமைந்தது இயக்குனர் மகேந்திரனுடன் கைகோர்த்த அந்த அற்புதமான தருணம். டைரக்டர் மகேந்திரன், ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா, கதாநாயகன். ரஜினி காந்த், இளையராஜா.. நால்வரும் இணைந்த முள்ளும் மலரும் படம் துவம்சம் செய்தது.. அதிலும் குறிப்பாக செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் மற்றும் அடிப்பெண்ணே பொன்னூஞ்சல் ஆகிய இரண்டு பாடல்களுக்கும் பாலுமகேந்திரா கேமரா காட்டிய அழகியல் தமிழ் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

இயக்குநர் என்ற வகையில் ஆரம்பத்தில் ஹாலிவுட் படங்களை தழுவி, அழியாத கோலங்கள், மூடுபனி என தந்தாலும் பின்னாளில் மூன்றாபிறை மூலம் அமைதியான கதகளி ஆடியவர். கமலுக்கு தேசிய விருது.. இவருக்கு சிறந்த போட்டோகிராபிக்கு விருது.. ஒரு வருடத்துக்கு மேல் ஓடி வசூலை அள்ளிக்குவித்த படம் மூன்றாம் பிறை என்பதெல்லாம் சாதனை ரகம்.மூன்றாம் பிறையில் சில்க் சுமிதா பாத்திரத்தை செக்ஸியாக மட்டுமே பார்த்தார்கள். நுட்பமாக ஆராய்ந்தால் அந்த பாத்திரத்தை கச்சிதமாக பாலுமகேந்திரா படைத்திருப்பார். சில்க் இல்லை என்றால் அந்த படத்தில் கமலின் பாத்திரம் டம்மியாக மாறி போயிருக்கும்.ஆஜானுபாகுவான இளைஞர்.. அவரைப் படுக்கையில் வீழ்த்த துடிக்கும் செக்ஸியான இளம்பெண். பலமுறை முயன்றும் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு அவரிடம் மாட்டாமல் தப்பிக்கும் இளைஞன், இன்னொரு பக்கம் யார் என்றே தெரியாத ஒரு மனநலம் குன்றிய இளம் பெண்ணை குழந்தை போல் வைத்து பராமரிப்பான்.ஸ்ரீதேவியிடம் குழந்தை தனத்தை காட்டும் கமலிடம், அவருக்குள் இருக்கும் ஆண்மையையும் கம்பீரத்தையும் பொன் மேனி உருகுதே பாடல் மூலம் ரசிகர்களுக்கு வெளிப்படுத்துவது சில்க் ஸ்மிதாதான்.

இயக்குனர் பாலுமகேந்திராவுக்கு இரு விதமாகவும் படமாக்க தெரியும் என்பதை பின்னாளில் அவருடைய படங்கள் பறைசாற்றின.மூடுபனி,உன் கண்ணில் நீர் வழிந்தால், வீடு, ரெட்டை வால்குருவி, சந்தியா ராகம், மறுபடியும் என ஒரு புறமும், இன்னொருபுறம் நீங்கள் கேட்டவை, சதிலீலாவதி போன்ற கமர்சியல் மசாலாக்களை யும் தந்தவர். நம்மைப் பொருத்தவரை அவருடைய படங்களில் மிகவும் பிடித்தது என்றால் அது அழியாத கோலங்கள் தான்.. பாலுமகேந்திரா தமிழில் முதன முதலா டைரக்ட் பண்ண அந்தப்படம் வேர்ல்ட் லெவல் கிளாசிக்..மீசை அரும்பும் விடலைப் பருவத்தில், மனதில் அலைபாயும் அதீத பாலியல் ஆர்வத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் அவ்வளவு அழகாக காட்சிப்படுத்தியிருப்பார்.. மூன்று விடலைகளின் சேட்டைகளையும் பள்ளி ஆசிரியையின் அணைகட்டும் போக்குகளையும் அந்த அளவுக்கு நேர்த்தியாக செதுக்கியிருப்பார்.நீரோடை பாயும் கிராமம், விதவிதமான மக்கள், தபால் ஊழியர், விலைமாது என்று அவற்றை விவரிக்க பக்கம் பக்கமாக எழுதவேண்டும்..கங்கை அமரன் பாடல்கள்.. பூவண்ணம் போல நெஞ்சும் பாடல்..அதைவிட, “நான் எண்ணும் பொழுது” பாடல்.. அந்த வங்காளத்தில் போட்ட இசையை இந்தி ஆனந்த் படத்தில் கொண்டுவந்த, அதை நிறைவாக அழியாக கோலங்களில் சேதாரமே இல்லாமல் சேர்த்திருப்பார் இசை ஜாம்பவான் சலீல் சௌத்திரி..பாலு மகேந்திராவை இந்த பாடல் எந்த அளவுக்கு மனதுக்குள் போட்டு தாக்கிக்கொண்டே இருந்திருக்க வேண்டும்? நமக்குந்தான்..

கதாநாயகிகள் தேர்வு விஷயத்தில் பெரும்பாலான இயக்குனர்களுக்கு சிவப்பான நாயகிகள் தான் முதலிடத்தில் தெரிவார்கள். ஆனால் பாலுமகேந்திராவுக்கோ மாநிற நாயகிகளே முன்னுரிமை. ஷோபா, அர்ச்சனா..தனிப்பட்ட வாழ்க்கையில் விதவிதமான சர்ச்சைகள் என்பது பாலுமகேந்திராவின் இன்னொருபக்கம்..காட்சிகள், அழகியல் பதிவு, வித்தியாசமான பாத்திர படைப்பு என தனிப்பாதையை தீட்டியதோடு, தமிழ் திரையு லகில் ஏராளமான சிஷ்யப்பிள்ளைகளை உருவாக்கி தந்துவிட்டுப்போன பாலுமகேந்திரா வின் 7-வது நினைவுதினம் இன்று என்பதை ஒட்டி சீனியர் ஜர்னலிஸ்ட் ஏழுமலை வெங்கடேசன் எழுதியவை இவை. .

இந்நிலையில் பாலுமகேந்திரா டைரியில் இருந்து நம்ம கட்டிங் கண்ணையா சுட்டு அனுப்பியிருக்கும் இன்றைக்கும் உயிர்ப்புடன் இருக்கும் சேதி இதோ!

சினிமாவும் பால் வியாபரமும் …

கன்றுக் குட்டிக்கான பாலைக் கறந்து விற்பனை செய்து பணம் சம்பாதிக்கலாம் என்று ஒருவன் நினைத்த மாத்திரத்திலேயே அவன் வியாபாரியாகிறான். இதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை.

அதுபோல, தன் குடும்பத்துக்கு செலவு செய்ய வேண்டிய பணத்தை சினிமாவில் போட்டு லாபம் பார்க்கலாம் என்று நினைத்த மாத்திரத்திலேயே ஒருவன் வியாபாரியாகிறான். அந்த வகையில் சினிமாத் தயாரிப்பாளர்கள்
அனைவருமே வியாபாரிகள் தான். இதில் விதிவிலக்கெல்லாம் கிடையாது.

தான் விற்பனை செய்யும் பாலில், ஒரு சொட்டுத் தண்ணீர் கூடக் கலப்பதில்லை என்ற திடசங்கல்பத்தில் ஒரு பால் வியாபாரி. லிட்டருக்கு 250 மில்லி தண்ணீர் என்ற எண்ணத்தில் இன்னுமொரு பால் வியாபாரி. லிட்டருக்குப் பாதிக்குப் பாதி தண்ணீர் என்ற முடிவில் மூன்றாவது வியாபாரி.

அவனவன் மனனிலைக்கு – attitude -க்கு ஏற்ப அல்லது பணம் பண்ணும் ஆசைக்கு ஏற்ப பால் சுத்தமாக அல்லது கலப்படமாக நமக்குக் கிடைக்கிறது.

சினிமா வியாபாரமும் அப்படித்தான்.

தயாரிப்பாளரும் இயக்குனர்களும் அவரவர் மனனிலைக்கேற்ப சமரசங்கள்- compromises செய்து கொள்கிறார்கள். தரமான தூய சினிமா மட்டுமே தருவேன் என்று ஒரு தயாரிப்பாளர், அல்லது இயக்குனர். நல்ல படம் தருவேன் ஆனால் வியாபாரம் கருதி அதில் கொஞ்சம் ” ஐட்டங்களும் ” வைப்பேன் என்ற மனநிலையில் இன்னுமொரு தயாரிப்பாளர் அல்லது இயக்குனர். படம் எடுப்பேன், ஆனால் அது வியாபார நோக்கத்தில் மட்டுமே! எனவே எனது படத்தில் ” விலைபோகக்கூடிய ” அம்சங்கள் நிறைய இருக்கும் என்ற முடிவுடன் மூன்றாவது தயாரிப்பாளர்.

இப்படியாக பால் வியாபாரம் செய்ய வருபவரின் நோக்கத்தைப் பொறுத்து, பாலின் தரம் அமைவதைப் போல, படம் எடுக்க வருபவரின் நோக்கத்தைப் பொறுத்தே படத்தின் தரம் அமையும். தரமான -கலப்படமில்லாத பாலை மட்டும் தான் வாங்குவோம் என்று பால் வாங்குபவர்கள் முடிவு செய்தால், கலப்படம் செய்து பால் விற்கும் வியாபாரிகள் காலக் கிரமத்தில் குறையத் தொடங்குவார்கள். இது எனது நப்பாசை – wishful thinking!

இது நடக்கிற காரியமில்லை என்பது எனக்குத் தெரியும்…..!

சினிமா கற்றுக் கொள்ள பூனே திரைப்படக் கல்லூரியில் சேர்ந்த 1966 முதல் இன்று வரை, கிட்டத்தட்ட 46- ஆண்டுகளில் எந்த வித வணிக சமரசங்களும் இல்லாமல் இரண்டே இரண்டு படங்களை மட்டும் தான் என்னால் கொடுக்க முடிந்தது. “வீடு”, “சந்தியாராகம்” என்ற இரண்டு படங்கள் தான் அவை. எனது மற்ற படங்கள் எல்லாமே பாடல் காட்சிகள் போன்ற சில வணிக சமரசங்களுடன் பண்ணப்பட்ட படங்கள் தான். ஆனால் அவற்றில் பல படங்கள் நல்ல படங்கள் என்று இன்று வரை மக்களால் கொண்டாடப்படும் படங்களாகவும், அதே சமயம் 200 நாட்களுக்குமேல் ஓடி வசூல் சாதனை புரிந்த படங்களாகவும் அமைந்து போனது என் அதிர்ஷ்டம்!

பெரிய திரையை விட சின்னத்திரையில் தான் “படைப்புச் சுதந்திரம்”- creativity freedom எனக்கு அதிகம் கிடைத்தது. 1999 செப்டம்பர் முதல் 2000 செப்டம்பர் வரை சன் தொலைக்காட்சிக்காக நான் செய்த “கதை நேரம்” குறும்படங்கள் படைப்பாளி என்ற வகையில் எனக்கு மிகவும் திருப்தியான அனுபவமாக இருந்தது. ஒவ்வொரு புதன் கிழமையும் ஒரு குறும்படம் என்ற வகையில் 52 குறும்படங்கள் செய்தேன். இந்த 52-ல் ஒரு 20-25 குறும்படங்கள் உலகத்தரம் வாய்ந்தவை என்பது எனது கணிப்பு. ஆங்கில அடியெழுத்துக்களுடன் (with subtitles) இவற்றை எந்த நாட்டிலும் திரையிடலாம். அப்படியொரு உலகளாவிய தன்மை அமைந்து போன குறும்படங்கள் அவை. தொலைக்காட்சியில் அவை காண்பிக்கப்பட்டும் 12-15 வருடங்களாகின்றன. இன்னும் மக்கள் அந்தக் குறும்படங்கள் பற்றிச் சிலாகிக்கின்றனர். “கதை நேரம்” குறும்படங்கள், பல கல்லூரிகளிலும் திரைப்படப் பள்ளிகளிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளன என்று அறிகிறேன். ரொம்ப சந்தோஷம்.

இது பாலுமகேந்திரா 11-oct-2012 (வியாழன்) அன்று எழுதியது