‘ழகரம்’ படத்தில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?

10 லட்ச ரூபாயில் ஒரு படம் எடுத்து திரையுலகம் காணாத அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார் புதுமுக இயக்குநர் க்ரிஷ். அப்படி உருவாகியுள்ள படம் தான் ‘ழகரம்’.இந்தப் படம் ஏப்ரல் 12-ல் வெளியாகிறது.

இயக்குநர் கிரிஷுக்கு சொந்த ஊர் நாகர்கோவில் .சினிமா கனவோடு சென்னை வந்தவர் புதிய தலைமுறை ,ஜீ தமிழ் போன்ற தொலைக் காட்சி சேனல்களில் பணியாற்றியிருக்கிறார் .பல நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கியிருக்கிறார் .
இப்போதுகூட புதிய தலைமுறை டிவியில் வீடு என்கிற பெயரில் நிகழ்ச்சி தயாரித்து வழங்கி வருகிறார்.

அது என்ன’ ழ கரம் ‘தலைப்பு ?

பலருக்கு வாயில் நுழையாத எழுத்துதான் ‘ழ’ அதன் சிறப்புக் கருதியே படத் தலைப்பாக ‘ழகரம்’ என்று வைத்துள்ளார். கிரிஷ் சினிமா வாய்ப்பு தேடலில் இறங்கியபோது நடிகர் நந்தாவின் நட்பு கிடைத்திருக்கிறது .அவரது ஆதரவால்தான் ழகரம் படம் வளர்ந்து நிறைவு பெற்று இறுதியாகப் பத்து லட்சத்தில் ஒரு படத்தை எடுத்து முடித்திருக்கிறார் .கோடிகளில் புழங்கும் திரையுலகில் 10 இலட்சத்தில் ஒரு படத்தை எடுத்து அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார் க்ரிஷ் .

நந்தா உள்பட இப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருமே ஊதியம் வாங்கிக் கொள்ளவில்லை. அவர்கள் தங்கள் ஊதியத்தை சினிமா ஆர்வமுள்ள இளைஞர் ஒருவரின் படைப்பிற்காகத் தாங்கள் செய்துள்ள பங்களிப்பு முதலீடாக இருக்கட்டும் என்று திறமையை முதலீடாக்கிப் பங்கெடுத்துள்ளனர்.

புதியதாக ஒரு கதையைத் தேடியபோது கிடைத்த ஒரு மர்ம நாவல் தான் ப்ராஜக்ட் ஃ .இதை எழுதியவர் கவாகேன்ஸ் என்கிற பெண்மணி.கதை பிடித்து திரைக்கதையாக்கி இதோ படமாக முடிந்துள்ளது. படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர்கள் ஜோ, பரத்வாஜ், பிரின்ஸ் என மூவர் . இசையமைத்துள்ளவர் தரன். நாயகன் நந்தா, ஈடன் நாயகி .இவர்கள் தவிர விஷ்ணு பரத், சந்திரமோகன், மீனேஷ் கிருஷ்ணா ஆகியோரும் நடித்துள்ளனர் .

“ஒரு புதையலைத் தேடி நான்கு பேர் செல்லும் பயணமே கதை. சென்னை, விசாகப்பட்டினம், காஞ்சிபுரம், தஞ்சாவூர் ,கோயம்புத்தூர் என்று பயணிக்கிறது கதை.

இன்று 10 இலட்ச ரூபாயில் ஒரு படம் எடுப்பது பெரிய சவாலான விஷயம் இதை சாத்தியப்படுத்தியது நந்தாவின் ஆதரவுதான். படத்தில் பெரிய முதலீடு அவர் தான். அவர் கொடுத்த ஊக்கம் சாதாரணமானதல்ல இதில் வழக்கமான வேடத்தில் அவரைப் பார்க்க முடியாது .முற்றிலும் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்து உள்ளார். திரையில் திட்டமிட்டு படம் எடுத்தால் செலவைக் குறைக்க முடியும் புதியவர் கூட ஒரு படத்தை எடுக்க முடியும் என்று நிரூபிக்க இந்த படத்தை எடுத்தோம் நண்பர்கள் பலர் உதவியுடன் படம் முடிந்துவிட்டது .கதிர் பிலிம்ஸ் சார்பில் பால்டிப்போ கதிரேசன் தயாரித்துள்ளார். aதிட்டமிட்டுச் சிக்கனமாகப் படம் எடுத்திருந்தாலும் விறுவிறுப்பான கதை சொல்வதில் எந்தக் குறையும் வைக்கவில்லை என்பதை படம் பார்க்கும்போது அனைவரும் உணர்வார்கள் . ஏப்ரல் 12 -ல் படம் வெளியாகிறது .” என்கிறார் இயக்குநர் க்ரிஷ்.

இந்த ‘ழகரம்’ ரசிகர்களுக்கு ஒரு படமாகவும் திரையுலகினருக்கு ஒரு பாடமாக அமையும் என்று கூறலாம்