தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் துவக்கம்!

தமிழ்த் திரைப்பட துறையில், அதிகமாக முதலீடு செய்பவர்களான சினிமா பைனான்சியர்களுக் காக ஒரு அங்கீகரிக்கப்பட்ட சங்கம் இன்று உதயமாகியுள்ளது. இந்தச் சங்கத்திற்கு ‘தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம்(South Indian Film Financiers Association – SIFFA)’ என்று பெயரிடப் பட்டுள்ளது. இந்தத் தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கத்தில் தற்போது 20 சினிமா பைனான்சியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். சங்கத்தின் தலைவராக திருப்பூர் சுப்ரமணியம், துணைத் தலைவராக சந்திரப்பிரகாஷ் ஜெயின், பொருளாளராக அன்புச் செழியன், செயலாளராக அருண் பாண்டியன் என நால்வரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும், R.B.சௌத்ரி, ஜெஸ்வந்த் பண்டாரி, பங்கஜ் மேத்தா, அபிராமி ராமநாதன், அழகர், ராம், அபினேஷ் இளங்கோவன், D.C.இளங்கோவன், பதாம், சீனு ஆகியோர் சங்கத்தின் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.

இந்தச் சங்கத்தின் அறிமுக விழா இன்று மாலை அக்கார்டு மெட்ரோபாலிட்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த அறிமுகக் கூட்டத்தில் சங்கத்தை அறிமுகப்படுத்திப் பேசிய சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், “எங்களுடைய தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் திரையுலகில் உள்ள மற்ற அனைத்து சங்கங்களுடனும் ஒற்றுமையுடன் பேசி, தமிழ்த் திரைப்படத் துறை நன்கு வளர பாடுபடும்…” என்று அறிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில், தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கத்தின் முக்கிய நோக்கங்களாக சிலவற்றை தெரிவித்து அதனை அறிக்கையாகவும் வெளியிட்டார்.

பைனான்சியர்கள் சங்கத்தின் அறிக்கை :

1. தமிழ்த் திரைப்படங்களுக்கு பைனான்ஸ் செய்யப்பட்டு இன்றுவரை படப்பிடிப்பு நடத்தப்படாமல் முடங்கிக் கிடக்கும் திரைப்படங்கள், எல்லா வேலைகளும் முடிந்து வெளிவராத திரைப்படங்கள் ஆகியவற்றை திரைக்குக் கொண்டு வர சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களை இந்தச் சங்கத்தின் மூலமாக அழைத்துப் பேசி சுமூகத் தீர்வு காணப்படும். முடங்கிக் கிடக்கும் திரைப்படங்களை தியேட்டருக்குக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

2. திரைப்பட நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகைகள் முதலில் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்து அட்வான்ஸ் பெற்றுக் கொண்ட பின்னர் திடீரென்று அந்தப் படங்களை முடித்துக் கொடுக்காமல் வேறு திரைப்படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து விடுகின்றனர்.

இதனால் சம்பந்தப்பட்ட திரைப்படம் முடங்கிப் போய் நிற்கும் நிலையும், அதிக தாமதமும் ஏற்படுகின்றது. இதனால் தயாரிப்பாளர்களுக்கு வட்டி அதிகமாகி, நஷ்டமும் ஏற்படுகின்றது.

இதனைத் தவிர்க்கும் பொருட்டு, இனிமேல் முதலில் நடிக்க சம்மதித்து ஒப்பந்தம் செய்து ஆரம்பிக்கப்பட்ட படங்களையே நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் முடித்துத் தர வேண்டும்.

அதையும் மீறி அவர்கள் வேறு படங்களுக்கு தேதியை கொடுக்கும்பட்சத்தில் குறிப்பிட்ட அந்தப் படங்களுக்கு பைனான்ஸ் கொடுப்பது சம்பந்தமாகவும் அந்தக் குறிப்பிட்ட நடிகர், நடிகைகள், இயக்குநர்களின் மற்ற திரைப்படங்களின் வெளியீட்டீன்போதும் எந்தவித ஒத்துழைப்பையும் கொடுக்கக் கூடாது என்று சங்கத்தில் முடிவு செய்யப்படும்.

3. தயாரிப்பாளர்கள் தங்களது திரைப்படத்தைத் தயாரிக்கும்போது அவர் விருப்பப்படும் பைனான்சியரை அணுகி அத்திரைப்படத்திற்கான லேப் லெட்டர் மூலம் பைனான்ஸ் பெற்றுக் கொண்ட பின்னர், மேலும் பைனான்ஸ் பெற மற்ற பைனான்சியர்களை அணுகும்போது சம்பந்தப்பட்ட முந்தைய பைனான்சியர்கள் அனுமதியின் பெயரில் மட்டுமே மற்றவர்கள் பைனான்ஸ் செய்வார்கள் என்று முடிவு செய்யப்படுகின்றது.

4. முதல் பைனான்ஸியரின் அனுமதி பெறாமல் லெட்டர் கொடுக்கும் லேபுக்கும், இனிவரும் காலங்களில் ஒத்துழைப்பு கொடுப்பது பற்றி பேசி முடிவுகள் எடுக்கப்படும்.

5. சில தயாரிப்பாளர்கள் ஒரு படத்துக்கு பைனான்ஸ் வாங்கி அந்த படத்தை பாதியில் நிறுத்தி விடுவது அல்லது ரிலீஸ் செய்யாமல் அடுத்த படத்தை ஆரம்பித்தால் அவர்களுக்கும் இனிவரும் காலங்களில் ஒத்துழைப்பு கொடுப்பது பற்றி பேசி முடிவுகள் எடுக்கப்படும்.

6. சில தயாரிப்பாளர்கள் தாங்கள் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாத பட்சத்தில், பைனான்சியரை குற்றம் கூறுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படிப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு இனிமேல் ஒத்துழைப்பு கொடுப்பதை பற்றியும் பேசி முடிவு எடுக்கப்படும். குற்றம், குறை கூறுபவர்கள் தாங்கள் வாங்கிய பணத்தை முதலில் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்.

7. திரைப்படத் துறையில் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், பைனான்சியர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகிய இவர்கள் திரைப்படத் துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மேற்கண்ட சங்கங்களுடன் நட்புடன் பழகி திரைப்படத்துறை வளர பாடுபடுவோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிமுக நிகழ்ச்சியில் தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், துணை தலைவர் சந்திரப்பிரகாஷ் ஜெயின், பொருளாளர் அன்பு செழியன், செயலாளர் அருண் பாண்டியன் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்களான ராஜா, அபினேஷ் இளங்கோவன், ராம், சங்ஜய் வாத்வா, சுனில் CP ஜெயின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.