ராஜமெளலி-யின் அடுத்த படத்துக்கு பூஜை போட்டாச்சு!

பாகுபலி புகழ் இயக்குனர் ராஜமெளலின் அடுத்த படம் இன்று பூஜையுடன் தொடங்கியது.

கடந்த வருடம் வசூலில் சாதனை படைத்த பாகுபலி 2 மற்றும் பாகுபலி1 ஆகிய படங்களை இயக்கியவர் எஸ் எஸ் ராஜமவுலி. இவ்விரு படங்களும் எல்லா மொழிகளிலும் வெளிவந்து சூப்பர் ஸ்டார்களின் ரெக்கார்டுகளை தகர்த்து எறிந்த திரைப்படமாக அமைந்தது. இதுவரை ரூ 1,600 கோடிக்கு மேல் வசூலித்த ‘பாகுபலி 2’, சீனாவிலும் மாற்றம் செய்து 6,000 -க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து நீண்ட காலமாக டிஸ்கஷனில் இருந்த ராஜமெளலி தன்னுடைய அடுத்த படத்தை இன்று பூஜையுடன் தொடங்கி விட்டார். இந்தப் படத்தில் ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம் சரண் தேஜா நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு சுமார் 300 கோடி ரூபாய் செலவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இப்படத்தின் கதாநாயகர்கள் மற்றும் இயக்குனர் பெயர் ஆங்கில எழுத்தான ஆர் என ஆரம்பிப்பதால் படத்தின் பெயர் தற்போதைக்கு ஆர் ஆர் ஆர் என வைக்கப்பட்டுள்ளது. இன்று நடந்த பட ஆரம்ப பூஜையின் போது சிரஞ்சீவி கலந்துக் கொண்டு முதல் ஷாட்டை கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.

மேலும் இந்த தொடக்க விழாவுக்கு பாகுபலி கதாநாயகர்களான பிரபாஸ் மற்றும் ராணா வந்திருந்தனர். அடுத்த ஆண்டு தீபாவளிக்கு இந்தப் படம் வெளிவரும் என ராஜமெளலி தெரிவித்துள்ளார்.