இன்டிவுட் திரைப்படவிழா! – டிசம்பர் 1 முதல் 5ம் தேதி வரை ஐதராபாத்தில் நடக்கிறது!

உலக அளவில் சினிமாதுறை பெரியளவில் வளர்ந்துகொண்டிருக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு சினிமாதுறையின் வளர்ச்சி பல மடங்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சியை மேலும் முன்னெடுத்து செல்ல, இந்திய சினிமாதுறையை உலக அரங்கில் பல்வேறு நாடுகளுக்கு கொண்டு சென்று, உலக முதலீட்டாளர்களை இந்தியசினிமாதுறைக்கு ஈர்க்கவும், புது டெக்னா லஜியை அறிமுகப்படுத்தவும், தியேட்டர் கட்டமைப்புகளை நவீனப்படுத்தவும் ஐதராபாத்தில் வரும் டிசம்பர் 1ம் தேதி முதலில் 5ம் தேதி வரை இன்டிவுட் திரைப்பட விழாபிரமாண்டமாக நடக்கிறது.

இது குறித்து அந்த விழாவை நடத்தும் ஏரீஸ் குழும சி.இ.ஓவும், விழா தலைவருமான சோஹன் ராய் சென்னையில் அளித்த பேட்டியின் போது ‘‘நான் கேரளாவில் பிறந்து வளர்ந்து, யு.ஏ.இயில் பிஸினஸ் செய்துவருகிறேன். சினிமா மீது அபரீத காதல் கொண்டவன். சில படங்களை இயக்கி யிருக்கிறேன் கேரளத்தில் அதி நவீன தியேட்டர் நடத்துகிறேன். இப்போது சில படங்களை தயாரித்து, இயக்கி வருகிறேன். உலக அளவில் சினிமாதுறை ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து வருகிறது. இந்தியாவுக்கு சினிமா வந்து 105 ஆண்டுகள் ஆகிவட்டது.ஆனால், இந்தியாவில் இந்த வளர்ச்சி இன்னும் அதிகரிக்க வேண்டும். இந்தியாவில் 20 மொழிகளில் படங்கள் தயாராகி வருகின்றன. ஆனால் வெளியாகும் தியேட்டர்கள் குறைவு, பிஸினசும் குறைவு. பக்கத்து நாடான சீனாவில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்கள் இருக்கிறன். சின்ன பட்ஜெட்டில் தயாராகும் சீன படங்கள் உலகம் முழுவதும் வெளியாகி பல கோடி வசூலை ஈட்டுகின்றன. அதற்கான மார்க்கெட்டை அவர்கள் அமைத்துவிட்டார்கள். இந்திய படங்கள் இப்போதுதான் சீனாவில் தங்கள் பிஸினசை தொடங்குகின்றன.

குறிப்பாக அமீர்கானில் தங்கல், பாகுபலி ஆகிய படங்கள் சீனாவில் பல நுாறுகோடி வசூலை ஈட்டி ஆச்சரியப்பட வைத்தன. சீனா மட்டுமல்ல, உலகில் பல நாடுகளில் நம் சினிமாதுறை விரிவடைய வேண்டும். சினிமாதுறையின் பிஸினஸ் பல மடங்கு அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இன்டிவுட் திரைப்படவிழா நடக்கிறது. 4வது ஆண்டாக இந்தவிழாவை நடத்துகிறோம். இந்த விழா ஐதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் உள்ள ஹைடெக் சிட்டியில் 5 நாட்கள் பிரமாண்டமாக நடக்கிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 200க்கும் அதிகமான படங்கள் திரையிடப்படுகின்றன. வெற்றி பெறும் படங்களுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான பரிசுகள் வழங்கப்படுகின்றன.

மேலும், இந்த விழாவையொட்டி 5 நாட்கள், 20க்கும் அதிகமான சினிமா பிஸினஸ் தொடர்பான நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், கண்காட்சிகள் நடக்கின்றன. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பல்வேறு துறைகளை சேர்ந்த முதலீட்டாளர்கள், சர்வதேச முதலீட்டாளர்கள், நுாற்றுக்கணக்கான சினிமாதுறையினர், தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள், பார்வையாளர்கள், திரைப்பட கல்லுாரி மாணவர்கள் என 25 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர் பார்க்கிறோம். சினிமாவில் பலதுறையில் சாதித்தவர்களை பாராட்டும் நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது. இந்த திரைப்படவிழாவில், நம் இந்திய சினிமாதுறை சந்திக்கும் எதிர்கால திட்டம், முதலீடு செய்யப்பட வேண்டிய துறைகள், சினிமா சவுண்டு, தியேட்டர் நவீனம், உலகமயமாக்கப் பட்ட வியாபாரம், முதலீட்டாளர்கள் சந்திப்பு,ஆராய்ச்சி மாநாடு, ஆலோசனை கூட்டங்கள், முன்னணி சினிமா நிறுவனங்கள் பங்கும் ஸ்டால்கள், பிலிம் டூரிசம், பிலிம்சிட்டி தொடர்பான விவாதம் என பல விஷயங்கள் இடம் பெறுகின்றன. இந்திய சினிமாதுறை வளர்ச்சிக்கு இந்த விழா, ஒரு முக்கிய விஷயமாக அமையும். இந்த வளர்ச்சிக்கு நம் தியேட்டர்களை நவீனப்படுத்த வேண்டும். சினிமா குவாலிட்டியை உயர்த்த வேண்டும். புது டெக்னாலாஜியை புகுத்த வேண்டும்.

இதற்கான அடித்தளமாகவும், புது திறமைகளை கண்டுபிடிக்கவும் விழா உதவும். விழாவில் சிறப்பு திறமை விருதுகள், இன்டிவுட் திறமை வேட்டை, பிரவசி ரத்னா விருதுகள், கோல்டன் பிரேம் விருதுகள் என பல நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.இந்திய சினிமாதுறையை ஒரு குடையின்கீழ் கொண்டு வர வர வேண்டும். நம் சினிமாதுறையை உலக அரங்கில் தலைநிமிர செய்ய வேண்டும். குறிப்பாக, வெளிநாடுகளில் நம் படங்கள் அதிக அளவில் திரையிடப்பட வேண்டும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம் சினிமாதுறை மீது முதலீடு செய்ய வேண்டும். இந்திய சினிமாவின் தரம் உலக அளவில் ஜொலிக்க வேண்டும் என்பது இந்த நிகழ்ச்சிக்கு முக்கிய காரணம். இந்தியாவில் 6 சதவீதம் மக்களே தியேட்டருக்கு சென்று படம் பார்க்கிறார்கள். மற்றவர்கள் டிவியில், பைரசியில் படம் பார்க்கிறார்கள். இதை மாற்ற வேண்டும்.

இந்திய சினிமா துறைக்கு வளமான எதிர்காலம் இருக்கிறது என்பதை முதலீட்டாளர்களுக்கு உணர்த்துவது விழாவின் முக்கிய நோக்கம். அவர்கள் முதலீட்டால் இந்தியா சினிமா வருங் காலத்தில் உலக அரங்கில் ஜொலிக்கும் என்பதில் ஐயமில்லை. 10 ஆண்டுகளுக்குமுன்பு சீனாவில் இந்த புரட்சி தொடங்கியது. 4 ஆயிரம் தியேட்டர்களாக இருந்த நாடு, இப்போது 50 ஆயிரம் தியேட்டர்களுடன் எங்கேயோ சென்றுவிட்டது. இந்தியாவில் அந்த நிலை வர வேண்டும். குறிப்பாக, கிராமங்களில் தியேட்டர்கள் அதிகம் வர வேண்டும். கிராமங்களில் பகலில் அரசு உதவியுடன் ஹைடெக் பள்ளி கிளாஸ் ரூம் ஆகவும், மாலை, இரவில் தியேட்டராகவும் நடத்த வேண்டும் என்றும் திட்டம் கொண்டு வர உள்ளோம்”என்று அவர் கூறினார்